Wednesday 5 March 2014

AASTHIKAM AND NAASTHIKAM


ஆத்திகமும் நாத்திகமும்

இருபதாண்டுகளுக்கு முன்னர் மலேசியாவிலிருந்து வெளிவந்த 'மயில்' இலக்கியப் பத்திரிக்கைகாக சமயக் கேள்விகளுக்குப் பதில் எழுதி வந்தேன்.
அந்தப் பகுதியில் வந்த நாத்திகம் -ஆத்திகம்' பற்றிய கேள்வி பதில்
.

இந்து சமய விளக்கம்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
மயில் இலக்கிய இதழ்
1992

கேள்வி:
எம்.இந்திரன்,
கம்போங் போகூல்,
பூச்சோங்

கேள்வி: நம்மிடையே ஒரு சாரார் கடவுள் இருக்கிறது என்றும் மற்றொரு
சாரார் கடவுள் இல்லையென்றும் கூறும் நிலைமை எப்படி ஏற்பட்டது?

பதில்: 'அஸ்து' என்றால் இருக்கிறது என்று பொருள். 'ந அஸ்து' என்றாலோ 'இல்லை' அல்லது 'இல்லாமல் இருக்கிறது' என்று அர்த்தம். இருக்கிறது என்போர் ஆஸ்திகர். இல்லை என்போர் நாஸ்திகர்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்து சமயத்தில் ஒரு மாபெரும் சரிவு ஏற்பட்டது. பெருமளவில் ஊழல்கள், மனிதன் மானிதனை மதிக்காத நிலைகள், சடங்கு சம்பிரதாயங்களின்மூலம் மக்களிடையே சிந்தனை முடக்கத்தைத் தோற்றுவித்துவிட்டனர். சமுதாயத்தில் ஒரு பிற்போக்கு வாதம் நீடித்து நிலவ ஆரம்பித்தது.

அந்த நிலையைத் தக்ர்ப்பதற்குப் பல சிந்தனையாளர்கள் தோன்றினர். சமுதாய வாழ்வை முடக்கிவைத்துக்கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளினின்றும் மக்களை விடுபடச் செய்வதற்காகப் பலவித முயற்சிகளை மேற்கொண்டு பலவித வழிகளைக் கண்டுபிடிக்கலாயினர். இந்து சமயத்திற்கு ஆணிவேராக விளங்குபவை நான்கு வேதங்கள். அந்த வேதங்களை அனுசரித்து மேலும் ஆறு நூல்கள் உள்ளன. இவற்றை 'அங்க நூல்கள்' என்பர். 'சடங்கு' என்னும் சொல்லும் 'சாங்கியம்' என்னும் சொல்லும் இதிலிருந்து ஏற்பட்டவைதாம் வேதங்கள்

நான்கினின்றும் தோன்றிய பகுதி நூல்களாகப் 'பிராமணங்கள்' ஆரண்யகங்கள்', உபநிடதங்கள், முதலியவைகளும் விளங்கின. இவை தவிர தர்ம நூல்கள் புராணங்கள் இதிகாசங்கள் முதலிய நூல்களும் ஏற்பட்டன. பிராம்மணர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. சமுதாயத்தின்மீது இரும்புப்பிடியொன்றை அவ்வர்க்கத்தினர் போட்டுவிட்டனர்.
வேதங்களில் சொல்லப்பட்டுள்ள தத்துவக் கருத்துக்களைவிட, , அவற்றில் காணப்படும் தெய்வங்களை எளிமையாகத் துதிக்கும் முறைகளை விட, அவற்றில் உள்ள வாழ்வியல் உண்மைகளை விட, சடங்குகள் தட்சணைகள் போன்றவையே முக்கியத்துவம் பெற்றன.

    இந்தத் தேக்கநிலைகள்மீது பலதுறைகளைச்சேர்ந்த அறிஞர்கள் பல்முனைத் தாக்குதல்களை நடத்தினர்.
    அவர்களில் புத்தர் மகாவீரர் பொன்றோர் வேதங்களை அறவே மறுத்து,
சடங்குகளைப் புறக்கணித்துப் புதிய சமயங்களைத் தோற்றுவித்தனர். புத்தர் தோற்றுவித்த மதத்தில் கடவுள் கொள்கையும் கிடையாது. வேதங்களும் புறக்கணிக்கப்பட்டன.
    சமணத்தில் அருகன், மலர்மிசை ஏகினான், எண்குணத்தான், வாலறிவன், பொறிவாயில் ஐந்தவித்தான் போன்ற பல பெயர்களில் ஒரு பேரிறைவனையும் அவனுக்குப் பரிவார சக்திகளாகப் பல தெய்வங்களையும் வணங்கினர். ஆனால் வேதங்களுக்குப் பதில்
இவர்கள் 'ஸ்ரீபுராணம்' என்னும் நூலையும் அதன் தொடர்பாக உள்ள பல வழி நூல்களையும் அவர்கள் பின்பற்றினர். 


    வேதங்கள் மார்க்கத்தில் கர்ம காண்டம், ஞானகாண்டம் என்ற இருவேறுபாடுகள் உண்டு. கர்மகாண்டத்தைப் பூர்வமீமாம்சை என்று ஞானகாண்டத்தை உத்தரமீமாம்சை என்றும் சொல்வ்துண்டு. பூர்வமீமாம்சையை கடைபிடிப்பவர்களை பூர்வமீமாம்சகர் அல்லது கர்மகாண்டர் என்றும் குறிப்பிடுவார்கள். வேதங்களில் குறிப்பிடப்பட்ட பூஜை, புனஸ்காரம், கடமைகள் சடங்குகள் முதலியவற்றை மட்டுமே இவர்கள் செய்தனர். பூர்வமீமாம்சையில் கடவுள் கொள்கையே கிடையாது. தேவர்கள் போன்றவர்கள் உண்டு. ஜைமினி என்னும் பெரும் ரிஷி நிறுவியது.  இந்தக் கோட்பாடு. குமாரில பட்டர், மண்டனமிசிரர் போன்ற பெரும் பெரும் மேதைகள் இந்த மதத்தில் இருந்தனர்.
    இவர்களை ஆதிசங்கரர் வாதத்தில் வென்று கடவுள் கொள்கையை ஏற்றுக்கொள்ளச்செய்தார்.
    வேதங்களையும் கடவுட் கொள்கையையும் ஏற்றுக்கொள்ளாத இன்னொரு மதமும் இருந்தது. அதன் பெயர் லோகாயாதம். 'கண்டதே காட்சி; கொண்டதே கோலம்; அனுபவிப்பதே உண்மை. நோக்கத்தின் வழி காரணம்; காரணத்தால் காரியம்; காரியத்தின் மூலம் பலன் - இவ்வாறுதான் தர்க்கரீதியாக அதன் தத்துவங்கள் செல்லும்.
    இதில் இறைவனுக்கே இடமில்லை. பச்சையான நாஸ்திக வாதம். இதில் உயிர், இறைவன், மறுமை, பாவம், புண்ணியம், கற்பு முதலிய விஷயங்கள் கிடையாது. வல்லவன் வகுத்ததே சட்டம், வழி, நியதி, நீதி, எல்லாமே. உடலும் உலகுமே மெய். இப்படியாக மிக விரிவாகவும் ஆணித்தரமாகவும் விவரித்துக்கொண்டே இவ்வாதம் போகும். .
    இந்த வாதத்தைச் 'சார்வாகம்' என்றும் குறிப்பிட்டனர். இந்த மதத்தில் ஆறு உட்பிரிவுகள் இருந்தன.
    அவற்றுள் ஒன்று 'பார்ஹஸ்பத்யம்' எனப்படுவது. அசுரர்களின் குரு சுக்கிரன். அசுரர்களின் விரோதிகள் தேவர்கள். தேவர்களின் குரு பிரஹஸ்பதி. சுக்கிரன் தவம் செய்யச் சென்றிருந்த காலத்தில் சுக்கிரனின் வடிவத்தில் பிரஹஸ்பதி அசுரர்களிடம் வந்தார்.
தேவர்களுடைய மாபெரும் சக்திகளையும் தவவலிமைகளையும் ஆன்மீக ஆற்றலையும் குன்றச்செய்து, அவர்களின் பலத்தையும் பராக்கிரமத்தையும் அழிப்பதற்காக சுக்கிரன் உருவில்
வந்த பிரஹஸ்பதி அவர்களிடம் தவறான முறைகளையும் வழிகளையும் நாஸ்திக வாதத்தையும் பரப்பிவிட்டார்.
    போலி சுக்கிரனாக வந்த பிரஹஸ்பதி பரப்பிவிட்ட மதமாதலால் அதற்கு 'பார்ஹஸ்பத்யம்' என்ற பெயர் ஏற்பட்டது.
 



    உபநிடதங்கள் மிகச்சிறந்த உள்ளர்த்தங்களை உள்ளடக்கியவை. இவற்றில் உள்ள சில தத்துவங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு, அவற்றை விவரித்து, வியாக்கியானம் செய்த உட்சமயங்களும் உண்டு. அவற்றில் ஒன்று ஸாங்க்யம், இதை நிறுவியவர் 'கபிலர்' என்னும் முனிவர். வேதங்களை ஸாங்க்யம் ஏற்றுக்கொண்டது. ஆனால் கடவுள் கொள்கையை இது ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே இதை நிரீஸ்வர சாங்க்யம் என்று அழைத்தார்கள்.
    பிற்காலத்தில் வந்த ஸாங்க்யர்கள் கடவுள் தத்துவத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்களை 'சேஸ்வர ஸாங்க்யர்' - 'ச ஈஸ்வர ஸாங்க்யர்' என்பர்.
    கோயில்களையும் சடங்குகளையும் சாஸ்திரங்களையும் அறவே வெறுத்து மிகக்கடுமையாகக் கண்டித்திருக்கின்றனர் சிவவாக்கியர் போன்ற சித்தர்கள்.
    இந்து சமயத்தில் மட்டுமே நாஸ்திக வாதம் உண்டு என்று எண்ணி விடவேண்டாம்.
    இரண்டாயிரத்து ஐந்நூற்று ஆண்டுகளுக்கு முன்னரேயே கிரேக்க நாட்டில் 'எப்பிக்யூரஸ்', ஸீனோ, டெமாக்ரிட்டஸ் போன்ற ஞானிகள் அவரவர் பாணியில் நாஸ்திக வாதங்களை ஏற்படுத்தினர். ஸ்க்கெப்டிக்ஸ் என்ற வகை நாஸ்திக வாதிகளும் இருந்தனர்.
    கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்த சிலர் ஏக்நோஸ்ட்டிக் எனப்படும் நாத்திகத்தை ஏற்படுத்தினர். அதலை சிறந்த அரசியல் ராஜ தந்திரிகளாகிய மாக்கியவெல்லி, ரேனே டேய்கார்ட் போன்றோரின் கொள்கைய்களில் இதன் சாயல் அதிகமாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் நீட்ஷவின் சித்தாந்தங்களை புதுமை வாதத்தை விரும்பிய இளைஞர்கள் படித்தனர்.
    பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த அறிஞர் இங்கர்ஸால். ஒரு மாலை நேரச் சொற்பொழிவுக்கு அந்தக் காலத்திலேயே மூவாயிரத்து ஐந்நூறு டாலர்கள் வாங்கியவர். 'Why I Am Agnostic' - 'நான் ஏன் நாத்திகன்' என்னும் நூல் பகுத்தறிவு பூர்வமாகச் சிந்திக்கும் ஆத்திகர்களாலும் கட்டாயமாகப் படிக்கப்படவேண்டிய புத்தகம். பேரறிஞர் அண்ணதுரையின் சிந்தனையில் மிகப் பெரிய தக்கத்தைத் தோற்றுவித்தவர் இங்கர்ஸால்தான்.
    ஐரோப்பிய சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் வால்ட்டேய்ரும் ரோஸோவும். இவர்களில் வால்ட்டேய்ர் சிறந்ததொரு நாத்திகவாதி.
    இவர்களுடைய சிந்தனைகளைத் தூண்டிவிட்டவர் 'பெனடிக் தே ஸ்ப்பிநோஸா'. இவர் ஒரு யூதர். இவருடைய கொள்கைகள்தாம் இன்றளவும் ஐரோப்பிய பகுத்தறிவு வாதச் சிந்தனைகளில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
    நாஸ்திக வாதம் எப்போதுமே இந்து மதத்தில் இருந்து வந்திருக்கிறது. கடவுள் இல்லை என்று கூறுபவர்களை 'நிரீசுவர வாதிகள்' என்று எண்பது தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் குறிப்பிட்டனர்.
    எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் என் தந்தையார் சின்னமுத்து பிள்ளையவர்களை அவ்வாறுதான் தென்கிழக்காசியாவில் அன்று வாழ்ந்த இந்து சமயப்பிரமுகர்கள் அழைத்தனர்.
    அதன் நிமித்தம் 'கடவுளின் உண்மைத் தோற்றம்' என்ற தலைப்பில் 1936-ஆம் ஆண்டில் அவர் ஒரு சிறிய விளக்க நூலை எழுத நேரிட்டது. அந்தச் சிறிய நூலின் தாக்கத்தைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்தக் காலத்துத் தமிழ் நேசன் பத்திரிக்கை அச்சிறு  நூலைத் தாக்கி தலையங்கங்களையே எழுதிவிட்டது.


    பெரியாரைப் பற்றி யார் யாரோ ஏதேதோ கூறுவார்கள். ஆனால் உண்மையிலேயே பெரியாரின் நாத்திக வாதத்தால் இந்து சமயம் நன்மையே பெற்றது என்பதுதான் ஆணித்தரமான அசைக்கமுடியாத யதார்த்தமாகும்.
    நாஸ்திக வாதம் இந்து சமயத்துக்கு எந்தக் காலத்திலேயுமே மிரட்டலாக விளங்கியதே கிடையாது. உண்மையிலேயே அதனால்தான் அவ்வப்போது இந்துசமயம் புத்துணர்வு பெற்றே வந்திருக்கிறது. இதுதான் உண்மை.
    நம் சமுதாயத்தில் பல நாஸ்திகர்கள் தங்களை ஆஸ்திகர்கள் என்று கருதிக் கொள்பவர்களைவிடச் சிறந்த நேர்மையாளர்களாகவும் பெரும் சிந்தனையாளர்களாகவும், மேதைகளாகவும் விளங்கியிருக்கின்றனர்.
    சமுதாயத்தில் மலிந்துவிட்ட பிற்போக்கு வாதத்தைத் தைரியமாக எப்போதுமே எதிர்த்து வந்துள்ள வீரம் மிகுந்த சிறுபான்மையினர் அவர்கள்.










                                        $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
    
  










RARE LITERATURE-#01


"முன் தோன்றிய மூத்தகுடி"
ஓர் அரிய நூல் -#01

புறப்பொருள் வெண்பா மாலை

ஓர் அரிய நூலைனைப் பற்றி இங்கு கொஞ்சம் பார்ப்போம்.

ஆதிகாலத்தில் அகத்தியர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும்
தம்முடன் இருத்திக்கொண்டு தமிழாய்ந்த காலத்தில், அந்தப் பன்னிரு
சீடர்களும் 'பன்னிரு படலம்' என்னும் நூல் தொகுப்பை யாத்தனர்.
அதன் வழிநூல்களாகப் பல நூல்கள் எழுந்தன. அவற்றுள் பல,
மறைந்துபோயின.
சிலநூல்கள் கிடைத்துள்ளன. அவற்றில் ஒருநூல்தான்
'புறப்பொருள் வெண்பாமாலை'
அதன் பெயர் உணர்த்துவது போல, இது வெண்பாக்களால் ஆகிய
நூல். புறவொழுக்கத்தைப் பற்றி விளக்கிக்கூறும் நூல் இது.
ஒவ்வொரு திணையிலும் உள்ள துறைகளுக்குரிய சூத்திரங்களையும்
குறிப்பிட்டு, அவற்றை எடுத்துக்காட்டும் விதத்தில் ஒரு வெண்பாவையும் அமைத்திருக்கிறார் நூலாசிரியர்.

நூலாசிரியர் - ஐயனாரிதனார்.
அவர் சேரர்குடியைச்சேர்ந்தவர்.

கடவுள்வாழ்த்தில் வினாயகர் துதி:

நடையூறு சொல்மடந்தை அல்குவது நம்மேல்
இடையூறு நீங்குவதும் எல்லாம் - புடையூறும்
சேனைமுகத் தாளிரியச் சீறுமுகத் தூறுமதத்து
ஆனைமுகத் தானை நினைத்தால்

தொகுதி தொகுதியாக மேலும் மேலும் வந்து குவிகின்ற எதிரிகளின்
படைகள் எல்லாம் பயந்து சிதறி ஓடிப்போகுமாறு சீற்றமுடன்கூடிய
திருமுகத்தை ஆனைமுகன் கொண்டுள்ளான். சுரக்கும் மத நீரையும்
கொண்டிருக்கிறான். அவன் திருவடிகளை நினைத்தால்
சொல்மடந்தையாகிய சரஸ்வதி, நடைவளம் சுரக்கின்ற
நாவளத்தைத் தந்து அருளுவாள். அதுமட்டுமல்லாது, நம்மைத்
தாக்கும் இடையூறுகளெல்லாமே நம்மைவிட்டு நீங்குவதும் கைகூடும்.

அடுத்து சிவனை வழுத்துவார்:

கண்அவனைக் காண்கஇரு காதுஅவனைக் கேட்கவாய்ப்
பண்ணவனைப் பாடப் பதஞ்சூழ்க - எண்ணிறைந்த
நெய்யொத்து நின்றானை நீலமிடற்றானை என்
கையொத்து நேர் கூப்புக.

எள்ளினுள் விளங்கும் எண்ணெய் போல் அனைத்திலும் இரண்டறக்
கலந்து நின்றானாகிய முதல்வன் சிவன். திருநீலகண்டத்தை
உடையவன். அப்படிப்பட்ட சிவனையே என் கண்கள் பார்க்கட்டும்.
அவன் திருநாமத்தையே என் காதுகள் கேட்கட்டும். என் வாயில்
தோன்றும் பண்ணெல்லாமே அவனைப் போற்றிப் புகழ்வதற்காகவே
உரிய சொற்பதங்களைப் புனைந்து விளங்கட்டும். என் கைகள், என்
உள்ளத்தோடு ஒருமைகொண்டு, அவன் திருவின் முன்பாக குவிந்து
வணங்கியிருக்கக்கூடியவையாக விளங்கட்டும்.

பழங்கால மரபில் கலைமகள் வாழ்த்தும் காணப்படும்.
பிற்காலத்தில் அவ்வாறு காணப்படுவதில்லை.

நாமகள் வாழ்த்து:

தவளத் தாமரைத் தாதார் கோயில்
அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே!

அருமையான இந்தத் தமிழ்நூல், இனிதாக நிறைவெய்துதலே குறி;
அதற்காக வெண்தாமரை மலர்களின் மகரந்தம் நிறைந்துவிளங்குகின்ற
கோயிலிடத்தே எழுந்தருளியிருப்பவளாகிய கலைமகளை நாம்
போற்றுவோம்.

இந்நூலின் சிறப்புப்பாயிரத்தையும் கவனிப்போம்.

மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை இருந்த சீர்சால் முனிவரன்
தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதல்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன்
ஓங்கிய சிறப்பின் உலகமுழு தாண்ட
வாங்குவில் தடக்கை வானவர் மருமான்
ஐய னாரிதன் அகலிடத் தவர்க்கு
மையறு புறப்பொருள் வழாலின்று விளங்க
வெண்பா மாலை எனப்பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன் பான்மையின் தெரிந்தே

இதன் உரையை அப்படியே கொடுக்கிறேன்.

'நிலைபெற்ற சிறப்பினை உடையவரானவானோர்கள் வேண்டிக்
கொள்ளுதலினாலே, தென்மலையாகிய பொதியத்திடத்தே வந்து
வீற்றிருந்தவர், சீர்மை நிறைந்த முனிவராகிய அகத்தியர்.
அவரிடத்தே, தண்மை செறிந்த தமிழ்மொழியின் நுட்பங்களிப்
பழுதின்றிக் கற்றுணர்ந்த கிடைத்தற்கரிய புகழினைப் பெற்றவர்கள்,
தொல்காப்பியர் முதலாகிய பன்னிரு புலவர்களும் ஆவர்.
அவர்கள் பகுதியோடும் அமையச் சொல்லிய புறப்பொருள் நூல்,
'பன்னிரு படலம்' என்பது.
அந்நூல் முழுவதையும் குற்றமின்றிக் கற்றுணர்ந்த சிறப்பினையுடையவர்
'ஐயனாரிதனார்' என்னும் இவர்.
உயர்ந்த மேம்பாட்டினையுடைய உலகம் முழுவதையுமே ஆட்சி
செலுத்திவந்தவரும், வளைந்த வில்லினைத் தம் பெரிய கையிடத்தே
கொண்டவருமான சேரர் குடியினரின் வழிவந்தவரும் இவராவர்.
அகற்சியை உடைய நிலப்பரப்பினதான தமிழ்நாட்டின்கண்
உள்ளவர்க்குக் குற்றமற்ற வகையிலே புறப்பொருள் இலக்கணம்
வழுவின்றி விளங்கும் பொருட்டாக, வெண்பாமாலை என்னும்
பெயரினை இட்டு, அப்பொருளினை முறையோடும் தெளிந்தவராக,
நூற்பண்பு பொருந்த, அவர் இதனைச் சொல்லி அருளினார்'.

இந்நூலைக் கண்டெடுத்து வெளியிட்டவர் தமிழ்த்தாத்தா
உ.வே.சாமிநாதய்யரவர்கள். அதற்குப் பொருளுதவி செய்தவர்
நான்காவது மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவியவரும் பாலவநத்தம்
ஜமீன்தாருமாகிய பாண்டித்துரைத் தேவரவர்கள்.

நமக்கெல்லாம் நன்கு அறிமுகமாகிய ஒரு சொற்றடர்
இந்நூலில் உள்ளதொரு வெண்பாவில் காணப்படுவதுதான்.
'கரந்தைப் படலம்' எனும் பகுதியில் 'குடிநிலை' என்னும்
துறையை விளக்கும்படியாக இயற்றப்பட்டது.

பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி.

உரை:

'பண்டு, இந்த வையகத்தினைக் கவிந்துகொண்ட, தெளிந்து
ஆரவாரிக்கும் ஊழிக்கடல் வெள்ளமானது விட்டு நீங்கியதாக,
அதன்பின் முற்பட மலைதோன்றி மண்தோன்றாதிருந்த அந்தப்
பழங்காலத்திலேயே, எல்லா மக்கட்குடியினும் முற்படத்தோன்றி,
வாளாண்மையுடன் முதிர்ச்சி பெற்றுவருவதும் அம்மறவனின்
குடியாகும். அதனால் இவன், பொய்மை நீங்க நாள் தோறும்
புகழினை விளைத்துச் சிறப்புறுதல் என்னதான் வியப்போ?' 





          $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$