Tuesday 15 May 2012

PON VANDU

பொன்வண்டு





பொன்வண்டு இருக்கிறதே....
 அதைப் பார்த்திருப்பீர்கள்.
 சிறு வயதில் அதன் காலில் நூலைக்கட்டி விளையாடியிருப்பீர்கள். கருநீலப்பின்னணியில் அதன் பல வண்ண ஜாலங்கள் அதன் மேல் படும் ஒளியில் மாறி மாறி மினுக்கிடுவதைப் பார்த்திருப்பீர்கள். அதனை ஒரு டப்பியில் போட்டு மூடிவைத்து அழகு பார்த்திருப்பீர்கள். அதன் உணவுக்காக சில இலைகளையும் கிள்ளிப் போட்டிருப்பீர்கள்.
.
 அந்தப் பொன் வண்டு இருக்கிறதே....
 அதனை விஞ்ஞான அடிப்படையில் பார்த்தால் அது நியாயமாகப் பறக்கமுடியாது. குட்டை கட்டையான சிறகுகள். சிறகுக்கே சம்பந்தமில்லாத குண்டான கனமான உடல். போதாததற்கு அந்தச் சின்னஞ்சிறு சிறகுகளின்மீது கவசத்தைப் போன்ற மூடிகள்.
 ஒரு T-67 போர் டாங்க்(battle tank) சிறிய மெல்லிய இறக்கைகளைக்கொண்டு பறக்குமா?
 அதுபோலத்தான்.

 ஆனால் பாருங்கள்....
 அந்தப் பொன்வண்டுக்கு இந்த ஏரோ டைனமிக்ஸ் விவகாரங்களெல்லாம் புரியாது.
 திருக்குறளில் வருகிறதே அந்த 'அமரகத்தே ஆற்றறுக்கும் கல்லாமா'..... அதைப்போலவேதான்...
 படித்ததில்லை.
 ஏதும் விஷேச டிரேய்னிங்க் எடுத்ததில்லை.
 ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரிடம் அது கேட்டுத் தெரிந்துகொண்டதுமில்லை.
 'விஞ்ஞானபூர்வமாகவோ அதிகாரபூர்வமாகவோ அது பறக்கமுடியாது; ஆகவே பறக்கக்கூடாது' என்று  அறியாது. பூரணமாக நம்பப்படவேண்டிய official final versionஐ யாரிடமும் அது கேட்டுத் தெரிந்து
கொள்ளவுமில்லை. அதையெல்லாம் அவசியமாக அது கருதியதும் கிடையாது.

 முட்டாள் பொன்வண்டு.
 இதெல்லாம் தெரியாது.

 ஆகவேதான் அது பறக்கிறது.
 அது பறப்பதைக் கேளுங்கள்......
  அற்புதமான இசை


http://www.youtube.com/watch?v=6QV1RGMLUKE

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday 11 May 2012

SHAH ABBAS! SHAH ABBAS!! SHAH ABBAS!!!

 சபாஷ்.... ஷா அப்பாஸ்!!!




 சபாஷ் என்னும் சொல் பாரசீக மூலத்தைக்கொண்டது.
 அதன் கதை.......
 பாரசீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே முக்கியமான அரசாக விளங்கியது.
ஈராயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அது ஒரு பேரரசாக வளர்ந்தது. பாரதத்தின் வடமேற்குப் பகுதிகள், ஆ·ப்கானிஸ்தான், மத்திய ஆசியப்ப்குதிகள், பாரசீகம், ஈராக், சீரியா, ஜார்டான், பாலஸ்தீனம், எகிப்து, துருக்கி ஆகிய தற்காலப்பிரதேசங்கள் அடங்கிய மாபெரும் சாம்ராஜ்யமாக பரந்துவிரிந்து கிடந்தது.  அதன் பேரரசன் ஸெர்ஸே, கிரேக்கநாட்டின்மீது படையெடுத்து, கிட்டத் தட்ட வென்றவன். ஐரோப்பாவின் பகுதிகளைப் பழங் காலத்தில் வென்ற மிகச்சில ஆசியர்களில் பெர்சியர்களும் அடங்குவர்.
 ஆனல் கிபி 600களில் அந்தப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. அதன்பின்னர் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்குப் பாரசீகம் வலுவிழந்து, 'ஏதோ இருக்கிறது' என்று சொல்லும் அளவிற்கே இருந்தது.
 பதினைந்தாம் நூற்றாண்டில் இஸ்மாயில் என்னும் மன்னன் பாரசீகத்தை ஒருங்குபடுத்த நினைத்தான். ஆனால் அவனுக்குப் பின்னர் வந்த அவனுடைய மக்கள் சரியாக இல்லாததால் துருக்கர் போன்றவர்கள் மீண்டும் நாட்டைத் துண்டாடினர்.
 இஸ்மாயிலினுடைய பேரனாகிய அப்பாஸ் மிஸ்ரா என்பவர் மட்டும் ஒளித்துவைத்து வளர்க்கப் பட்டிருந்தார். அடிக்கடி அவரைக் கொல்ல முயற்சிகள் நடந்தவண்ணமிருந்தன. ஆனால் தப்பிவிட்டார். அவருடைய தாயையும் தந்தையையும் கொலை செய்து விட்டனர்.
 அவருக்கு பதினாறே வயதாகும்போது அவன் புரட்சி செய்தார். எப்படியோ பல போராட்டங்களுக்குப் பின்னர் அப்பாஸ் மிஸ்ரா, பாரசீகத்தின் முதல் பேரரசராக ஷா அப்பாஸ் - Shah Abbas - என்னும் பெயரில் முடிசூட்டிக் கொண்டார்.
 ஆட்சிக்கு வந்தது முதலில் அங்கு வலுவாக இருந்த அனைவரையும் ஒழித்துக்கட்டினார்.  இது சில ஆண்டுகளுக்கு நடந்தது. இருப்பினும் தாம் ஆட்சியில் நீடிப்பது குறித்து ஷா அப்பாஸ¤க்கு ஒரு பயம் இருந்துகொண்டேயிருந்தது. ஆகவே சோதிடர்களைக் கொண்டு கணிக்கச்செய்தார். பிறந்தது முதல் பல அபாயங்களைச் சந்தித்தே பழக்கப்பட்டிருந்த அப்பாஸ¤க்கு எப்போதுமே ஒரு சந்தேகம் கலந்த பயம் இருந்தே வந்தது. சனி செவ்வாய் ஆகியவற்றின் சஞ்சார நிலை சரியில்லை என்று சோதிடர்கள் கூறிவிட்டனர்.  எத்தனை ட்களுக்கு இதுமாதிரி என்று அறிந்து கொண்ட பின்னர், அப்பாஸ் பதவியைவிட்டு இறங்கினார். 'முர்த்தாத்' எனப்படும் அபசாரத்தைப் புரிந்த ஓர் ஆளை அரியணையின் அமர்த்திவைத்தார். பக்காவாகப் பாதுகாப்போடு இதைச் செய்தார். மூன்று நாட்கள் அப்படியே வைத்திருந்துவிட்டு, நான்காம் நாள் அந்த ஆளைக் கொன்றுவிட்டார். கிரக சஞ்சாரம் எல்லாம் சரியாகிவிட்டதறிந்து அரியணையில் மீண்டும் ஏறினார்.


 அவனுடைய ஆட்சியில் பாரசீகம் மீண்டும் பழைய உன்னத நிலையை அடைந்தது.
 பேரறிஞராக விளங்கிய அவர், பாரசீகத்தின் பல துறைகளிலும் பல சீர்திருத்தங்களைச் செய்தார். யாராலும் வெல்லபடவே முடியாத பெருவீரர் என்று பெயர் பெற்றார். மிக வலுவான அதி நவீனமான எண்ணிக்கையில் அதிகமுள்ள படை. அந்தப் படை வீரர்களால் மிகவும் அன்பாக உயிரினும் மேலாக நேசிக்கப்ப்பட்டார். அப்பாஸைப் பார்க்கும் போதும் படை செல்லும்போதும் 'ஷா அப்பாஸ்' என்று முழக்கமிட்டுக் கொண்டே செல்வார்கள். பழங்காலத்தில் 'ஹெயில் ஸீஸர்', பின்னால் 'ஹைல் ஹிட்லர்' என்று கோஷம் போட்டு வாழ்த்து வணக்கம், சல்யூட் போடுவதுபோல அவர்கள் 'ஷா அப்பாஸ்' என்று முழக்கமிட்டனர். Gladiator படத்தில் பார்த்திருப்பீர்களே, கூட்டங்கள் படைத் தலைவனின் பெயரைச் சொல்லி முழக்கமிடுமிடுமே, "மேக்ஸிமஸ்...மேக்ஸிமஸ்...மேக்ஸிமஸ்...."
 தனக்கென்று ஒரு மிகப் பெரிய மிக அழகிய தலைநகரை உருவாக்கினார். அக்காலத்தில் உலகின் மிக அழகிய நகரங்களில் அது தலைமை பெற்று விளங்கியது. அதில் ஒரு பெரிய திடல். அதற்கு மைதான்'  என்று பெயர். அங்கு பலவிதமான வீர விளையாட்டுகள் நடைபெறும். அந்த விளையாட்டுக்களின் போது பாராட்டுமுகமாக, 'ஷா அப்பாஸ்.....ஷா அப்பாஸ்....ஷா அப்பாஸ்' என்று முழக்க மிட்டனர்.  அது ஒரு பாராட்டுச்சொல்லாக மாறி மருவி வந்துவிட்டது. முகலாயர்களுக்குப் பாரசீகத்துடன்
நெருங்கிய தொடர்பு உண்டு. ஜஹாங்கீரின் மனைவி நூர்ஜஹான் பாரசீகப் பெண்தான். பாரசீகர்களின்
தாக்கம் நிறைய ஏற்பட்டது. அவர்களின் மூலம்
'ஷா அப்பாஸ்' இந்தியாவுக்கும் வந்துவிட்டது.
நாளடைவில் அது ஷாபாஸ், ஷாபாஷ், சபாஷ், சவாசு என்றெல்லாம் மருவிவிட்டது.
 மலாய்மொழியிலும் அது 'ஷாபாஸ்' என்றே வழங்குகிறது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday 6 May 2012

TAXING TAXATION



வரி, வட்டி, கிஸ்தி........

அர்த்தசாஸ்திரம் என்றதும் கௌடில்யர் எனப்படும் சாணக்கியர் எழுதிய நூல்தான் நினைவுக்கு வரும்.

 உள்ளபடிக்கு அதுமட்டுமேதான் நினைவுக்கு வரும்.
 தர்ம,காமார்த்தமோக்ஷம் எனப்படுபவை நால்வகைப் படும். இவற்றைத் தமிழில் அறம் பொருள் இன்பம் வீடு என்று சொல்வோம்.
 இவற்றில் அர்த்தம் என்னும் துறையாகிய பொருள்நூல்தான் அர்த்தசாஸ்திரம்.
 கௌடில்யரின் அர்த்தம் நூல் தவிர இன்னும் பல நூல்கள் இருந்தன. சுக்கிரநீதி, நாரதீய நீதி,
பார்ஹஸ்பத்ய நீதி, பராசர நீதி என்று சில நூல்கள் இன்றும் இருக்கின்றன. அவற்றில் சில பகுதிகள் அழிந்தும் விட்டிருக்கின்றன.
 ஜாதீய அடிப்படையில் அமைந்த இந்த நூல்கள் பிராம்மணர்களுக்குச் சார்பாக ஓரவஞ்சகமாக எழுதப் பட்டிருந்தன. கடந்த பல நூற்றாண்டுகளாக இந்த நூல்களின் அடிப்படையில்தான் சமுதாயத்தின் சட்ட திட்டங்கள் நீதி முதலியவை அமைந்திருந்தன.
 விஜயநகரப் பேரரசின் விவசாயிகள் கொடுக்கவேண்டிய வரிகள் முதலியவற்றின் விகிதம் காணப்படுகிறது. இது பராசரநீதியின் அடிப்படையில் உள்ளது.
 ஒரு குட்டி என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவு. அதில் முப்பது மூட்டைகள் நெல் விளையும் என்பது ஒரு தோராயமான கணக்கு.
 அந்தக் காலத்தில் நிலங்கள் யாருக்காவது சொந்தமாகத்தான் இருந்தன. மொத்த அறுவடையில் நிலச் சொந்தக்காரருக்கு கால் பங்கு. அதில் விவசாயம் செய்தவருக்கு அரைப் பங்கு. அரசாங்கத்துக்கு ஆறில் ஒரு பங்கு. கோயில்களுக்கு முப்பதில் ஒன்று. பிராம்மணர்களுக்கு இருபதில் ஒன்று என்ற
விகிதத்தில் மகசூல் பிரிக்கப்பட்டது.
 அரசாங்கம் பல சமயங்களில் மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் கொண்டுவிடும். போட்டி அரசாங்கம் இருந்தால் ஆளுக்கு மூன்றில் ஒரு பங்கு என்று எடுத்துக்கொள்வார்கள்.
 பல சமயங்களில் பாதிக்குப் பாதியை அரசு எடுத்துக்கொள்ளும்.
 பல சமயங்கள் படையெடுப்புகள் அடுத்தடுத்து நடக்கும் அப்போதெல்லாம் இடங்கள் வெகுவேகமாகக் கைமாறும். அந்த மாதிரி சமயங்களில் வருகிறவன் போகிறவனெல்லாம் ஆளாளுக்குப் பறித்துக்கொண்டு செல்வார்கள்.
 இவை போக மகமை என்று ஒன்றும் இருந்தது.
 புலவர்கள், ஆசிரியர்கள், வண்ணார், நாவிதர், புரோகிதர், சோதிடர், வைத்தியர், மருத்துவச்சி, பாடிக்காவல், கொத்தவால், தலையாரி, கணக்கன் போன்றவர்களுக்கு நிலத்தின் அளவுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நிலத்துக்காரரும் கொடுப்பார்கள். இதனை 'அளந்துபோடுதல்' என்றும் சொல்வார்கள். குறிப்பிட்ட எண்ணிகையுள்ள படிகள் கொள்ளக்கூடிய ஓலைக் கொட்டான்கள், 'பொட்டி'கள் இருக்கும். அவைதான் கணக்கு.
 விஜயநகரப்பேரரசின் விவசாயவரி வருமானம் மட்டுமே ஓராண்டுக்கு எண்பத்தோரு கோடி வராகன் பெறுமானமாக இருந்தது. வராஹன் என்பது ஒரு பொன் நாணயம். கிட்டத்தட்ட இப்போதைய கணக்குக்கு அரைப் பவுன் எடை இருக்கும்.
 Militaristic அமைப்பாகப் பேரரசை ஆக்கும்போது அதைப் பல பகுதிகளாகப் பிரித்து பல நாயக்கர்கள், பாளையக்காரர்களின் மேற்பார்வையில் விட்டிருந்தார்கள்.
 அவர்கள் மட்டுமே அறுபது லட்சம் வராகன் செலுத்தி யிருக்கிறார்கள். அது பேரரசின் மகசூலில் பாதியின் மதிப்பு. அவர்கள் எடுத்துக்கொண்டது, அவர்களின் படைகளின் செலவு ஆகியவை போக மீதியைத்தான் அவர்கள் பேரரசின் கஜானாவுக்கு அனுப்பியுள்ளார்கள்.
 தலைக்கோட்டைப் போருக்குப்பின்னர் பேரரசின் பரப்பளவு குறைந்துவிட்டது. ராய்ச்சூர் தோவாப் போன்ற வளமிக்க பிரதேசங்கள் கைமாறிப்போயின.
 சதாசிவராயர் என்பவர் கிருஷ்ணதேவராயருடைய தம்பி மகன். அவருடைய காலத்தில் பேரரசின் வருமானம் பன்னிரண்டு கோடியாகக் குறைந்துவிட்டது.
 அறுவடையின் பங்கை அரசு நெல்லாகவோ காசாகவோ வாங்கிக்கொண்டது. நெல்லாயம், காசாயம் என்று சொல்வார்கள்.  புதுக்கோட்டைப் பகுதியில் இருந்த வரிவிதிப்பு:
கார்காலத்துக் குறுவை - மூன்றில் ஒரு பகுதி
எள், கேப்பை, கொள், பாசிப்பயிறு, மொச்சை முதலியவை - கால் பகுதி
வரகு, சாமை, கம்பு முதலியவை - ஆறில் ஒரு பங்கு
 இவை போக இன்னும் பலவிதமான வரிகள் நிலங்களின் பேரில் விதிக்கப்பட்டிருந்தன.
 விவசாயிகளுக்கு என்னத்தை எஞ்சியிருக்கப்போகிறது?&&&&&&&&&&&&&&&&&&&&&&

Wednesday 2 May 2012

KRISHNADEVARAYA-#1


கிருஷ்ணதேவராயரின் உடற்பயிற்சி


 இந்திய வரலாற்றில் மாலிக் கா·பூர் என்னும் படைத்தளபதி மிக முக்கியமானவர். இந்திய வரலாறே அவரால் முக்கிய திருப்பங்களை அடைந்தது.
 அலாவுத்தீன் கில்ஜி என்பவன் டில்லி சுல்த்தானாக இருந்தபோது அவனுடைய நம்பிக்கைக்குப்
பாத்திரமான அடிமையாகவும் தலைமைத் தளபதியாகவும் விளங்கியவன்.
 வட இந்தியாவின் பல இடங்களை அவன் கைப்பறினான். பின்னர் தென்னிந்தியா முழுவதையும் பிடித்துக்கொண்டான்.
 அவனுக்குப் பின்னர் தென்னிந்தியாவில் இருந்த நான்கு பேரரசுகளும் அழிந்தன.
 ஆனால் 1336-இல் விஜயநகரம் என்னும் புதிய அரசு தோற்றுவிக்கப்பட்டது.
 அதே சமயம் அதற்கு வடக்கே பாமனி என்னும் பெயரில் ஒரு சுல்த்தானேட்டும் ஏற்பட்டது.
 விஜயநகரம் இக்காரணத்தால் வடக்கே பரவ முடியாமல் தெற்கே பரவியது.
 கிருஷ்ணா நதியிலிருந்து தெற்கேயுள்ள அனைத்துப் பிரதேசங்களும் விஜயநகரின் ஆட்சிக்குக்
கீழ் வந்தன.
 விஜய நகரப் பேரரசை ஆண்டவர்களில் மிகவும்  புகழ் வாய்ந்தவர் கிருஷ்ண தேவ ராயர்(1509 - 1529). அப்போது ஒரிஸ்ஸா, கலிங்கம் வரையில் அவர் கைப்பற்றிக்கொண்டார்.
 அவரே ஒரு பெரும்புலவர். இசைப் போரறிஞர். போரியல் வல்லுனர். சிறந்த நிர்வாகி. அவர் அரசவையில் அஷ்ட திக் கஜங்கள் என்ற பெயரில் புலவர்களும் சாஸ்திர மேதைகளும் இருந்தனர்.


 டோமிங்கோ பயிஸ் என்பவர் போர்த்துகீசியப் போராளி. விஜயநகரின் பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்தவர். அவருடன் பழகியவர்.
 கிருஷ்ணதேவராயரைப் பற்றி நிறையக் குறிப்புகள் எழுதிவைத்திருக்கிறார். அதில் ராயருடைய
தோற்றம், பழக்கவழக்கங்கள், மனைவிமார் முதலிய விஷயங்களைப் பற்றி விலாவாரியாக எழுதியுள்ளார்.
 போர்த்துகீசிய மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ராபர்ட் செவெல் தமது 'Forgotten Empire' என்னும் நூலில் போட்டிருக்கிறார். இந்த நூலைப்பற்றி பிறகு எழுதுகிறேன்.
 இப்போது கிருஷ்ணதேவராயரைப் பற்றி டோமிங்கோ பயிஸ் எழுதிய குறிப்புகளில் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தமிழில் மாற்றியிருக்கிறேன்.....
 "இந்த மன்னர் நடுத்தர உயரத்தைக்கொண்டவர். கொஞ்சம் பருமனானவர். மன்னர்களிலேயே
மிகவும் அதிகம் அச்சத்தை உண்டாக்குபவர் இவர்தான். மன்னர் என்ற  லட்சணத்தை பரிபூரணமாகப்
பெற்றவர் இவர். மகிழ்ச்சியும் குதூகலமும் நகைச்சுவை உணர்ச்சியும் மிக்கவர்.
 வெளிநாட்டுக்காரர்களை மதிப்புடன் நடத்துபவர். அவர்களுக்கு ஏற்ற கௌரரவத்தைத் தவறாமல் கொடுப்பவர். அவர்களைப்பற்றி அக்கறையுடன் விசாரித்துக்கொள்வார். நீதிமிகுந்த பெருமன்னர்.
ஆனால் திடீர் திடீரென்று கடுங்கோபம் வந்துவிடும்.....
 தினமும் விடிவதற்கு முன்னரேயே எழுந்துவிடுவார். உடனேயே முக்கால் பைண்ட் (400 மில்லி)
நல்லெண்ணெயைக் குடிப்பார். அத்துடன் நல்லெண்ணையை உடல்முழுதும் தேய்த்துக்கொள்வார்.
 இடுப்பில் ஒரு சிறிய துணியை இறுக்கிக்கட்டிக்கொள்வார்(லங்கோடு). பெரும் பெரும் கனமான குண்டுகளைக் கைகளில் தூக்கிப் பயிற்சி செய்வார். அதன்பின்னர் வாள்பயிற்சி செய்வார். அவர் உட்கொண்ட  எண்ணெயெல்லாம் வியர்வையாக வெளிவரும்வரையில் அவர் இவ்வாறு உடற்பயிற்சி செய்வார்.
 அடுத்தபடியாக ஒரு மல்யுத்த வீரருடன் மல்லுக்கட்டுவார். அதன்பின், ஒரு குதிரையில் ஏறி மிக வேகமாக சவாரி செய்வார். இதையெல்லாம் அவர் விடிவதற்கு முன்னரேயே செய்துவிடுவார். பின்னர் அவர் குளியலுக்குச் செல்வார். அதனை ஒரு பிராமணர் செய்வார்(ராஜாபிஷேகம்). அது முடிந்ததும்
கோயிலுக்குச் சென்று நித்திய சடங்குகளில் கலந்துகொள்வார்.
 அங்கிருந்து ஒரு மண்டபத்துக்குச் செல்வார். தம்முடைய மந்திரி பிரதானிகளுடனும்
அதிகாரிகளுடனும் இங்கு அவர் தம்முடைய அரசுக்கடமைகளை நிறைவேற்றுவார்.

----------------------------------------------------------------------------------------------------