Saturday 9 July 2011

மனமும் மந்திரமும் -#2



பொதுவாகவே மந்திரங்களில் பலவகையுண்டு. பெண் தேவதைக்குரிய மந்திரம், ஆண் தேவருக்குரிய மந்திரம் என்பது மாத்திரமல்ல.
ஆண் பெண் மந்திரங்கள்கூட உண்டு.
ராஜமந்திரம் என்றவகையுண்டு. 
நரசிம்ம மந்திரம் என்பது ஒரு ராஜமந்திரம். இதையெல்லாம் செய்வதற்கு ஆசாரங்கள் நியமங்களெல்லாம் உண்டு.  ஆசாரம், நியமம் என்றால் நம்ம ஆட்கள் எப்போதுமே மரக்கறி சாப்பிடுவது, குளிப்பது, கால்கை கழுவுவது, பஞ்சகச்சம் வைத்துக்கட்டுவது, இடுப்பில் துண்டு கட்டுவது, கொட்டை, பட்டை அணிதல், சடங்குகளை ஏராளமாக இணைத்துச்செய்வது போன்றவற்றில்தான் கவனத்தையும் செலுத்துகிறார்கள்; அவற்றையே வலியுறுத்துகிறார்கள்.
அவை மட்டும் போதாது.
மனதில் உறுதி, வினைத் திட்பம், தீர்க்கமான கவனம், அலையாத, நிலைத்த மனம், ஒருங்கு சேர்த்து இலக்கில் மட்டுமே செலுத்தப்படும் மனம், தேவையானவற்றை மட்டுமே பார்க்கும் பார்வை.....இப்படி பல விஷயங்கள் உண்டு. 
லயிக்காத மனம் பிரயோசனமில்லை.
விக்கிரகம், படம், யந்திரம், மண்டலம் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. 
மனோலயம் ஏற்படவேண்டும் என்பதற்கும் அவை ஒரு காரணமாக அமையும். மனதை ஈர்ப்பதற்காக. கண்களுக்கும் பார்வைக்கும் இலக்கு, மனதுக்கும் லயிப்பு. 

மனதைப் பற்றி நம் யோகநூல்கள் நிறையவே சொல்லியிருக்கின்றன.  இவை தவிர நேரடியாகக் கற்றலின்மூலமும் தானாகச் செய்யும் பயிற்சிகளின் மூலமும் அனுபவத்தின்மூலமும் மனதின் தன்மைகள், செயல்பாடுகள், இயக்கம், போக்கு முதலியவற்றை அறிந்துகொள்ளமுடியும். 

பல பொருள்களிலும் மனது செல்லும் நிலையை 'க்ஷ¢ப்தம்' என்று சொல்வார்கள்.

இயக்கமின்மை, சோம்பல், லயிப்பின்மை, கவனமின்மை முதலியவைகூடிய நிலையை 'மூடம்' என்து சொல்வார்கள். அர்த்தம் மாறிப்போய் பயன்படுத்தப்படும் சொற்களில் இதுவும் ஒன்று. 
"பலகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே!" என்னும்போது இந்த நிலையில் உள்ள மனதை ஆதிசங்கரர் குறிப்பிடுகிறார்.

மனது சில சமயங்களில் வெளியில் கண்டதனமாகத் திரிந்துவிட்டு, சிற்சில சமயங்களில் உள்முகமாகவும் ஓடி ஒளிந்துகொள்ளும். இந்த நிலையை 'விக்ஷ¢ப்தம்' என்று யோகநூல்கள் கூறும். 

ஒரே இலக்கில் மனதை லயிக்கச்செய்து அதிலேயே நிறுத்திவைத்துக்கொள்வது'ஏகாக்ரம்'.  யோகத்தில் மட்டுமல்லாது மார்ஷியல் போர்முறைகளிலும் 'ஏகாக்ரம்' மிகவும் அவசியமானது. அடுக்கி வைத்திருக்கும் செங்கற்களை கையால் அடித்து உடைக்கும் வீரரை கவனித்துப் பாருங்கள்.  ஒழுங்காகச் செய்யப்படும் மார்ஷியல் போரும் ஒரு யோகம்தானே. 

மனதை முற்றிலுமாக இயக்கமின்றி ஆக்கி, நிறுத்தியோ அல்லது இல்லாமலோ செய்வதை 'நிருத்தம்' என்று யோகநூல் கூறும். 
யோகம் என்றால் என்ன? அதற்கு பதஞ்சலியார் சொன்னது: 
"யோகாஸ் சித்த நிரோத:"
இல்லாமல் செய்வது நிரோதனம். 'நிரோத்' என்னும் பெயரும் இதே வேரைக் கொண்டதுதான். 
மனதை இல்லாமல் செய்வது யோகத்தின் உச்சநிலை.

'சும்மா' என்றொரு தொடரை எழுதியிருந்தேன்.

மாத்ருகா மந்த்ர புஷ்பமாலா, மானச பூஜை, பாவனாமார்க்கம், இப்போதுள்ள Virtual Imaging முதலியவற்றுக்கெல்லாம் மேலே குறிப்பிடப்பட்ட மனநிலைகள் தொடர்புள்ளவை.

மாத்ருகா மந்திரம், மாத்ருகா மந்த்ர புஷ்பமாலா முதலியற்றைப் பற்றியும் எழுதவேண்டும்.