Monday 23 May 2011

கோமயத்தை காசாக்கும் வித்தை

மலேசியாவில் இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் அபிஷேகம், விசேஷப்பூஜை என்று பெருமளவிலும் சிறிய அளவிலும் ஏராளமாகச் செய்கிறார்கள்.  ஒரு காலத்தில் இப்படியெல்லாம் இந்த அளவுக்கு இல்லை.  பூஜைகளும் எளிமையானவையாக இருக்கும்.  இப்போது மிக அதிகமான சரக்குகள், பொருட்களுடன் சிறு சிறு பூஜைகள்கூட செய்யப்படுகின்றன. 

முன்பு ஒருமுறை கோமயம் என்னும் மாட்டு மூத்திரத்தை விற்பதைப் பற்றி எழுதி யிருந்தேன்.   மலேசியாவில் அதையெல்லாம் ஒரு காலத்தில் பூஜைகளில் சேர்த்துக்கொண்டதுகூட கிடையாது. யார் போய் மாடுகள் இருக்கும் இடத்துக்குச் சென்று மாட்டு மூத்திரம் கலெக்ட் பண்ணுவது?  


ஆனால் சில ஆண்டுகளாக மாட்டு மூத்திரம் பிலாஸ்ட்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.  அதற்கும் மார்க்கெட் நிலவரங்கள் இருக்கும்போல.  முன்பு ஒரு சிறிய பாட்டில் 2 ரீங்கிட் 70 காசுக்கு விற்கப்பட்டது.  அதன்பின் பார்த்தபோது நூறு மில்லி பாட்டில் மாட்டு மூத்திரம் 1 ரீங்கிட் 20 காசு விலையாக இருந்தது.  மார்க்கெட் எனப்படும் சந்தைத்தனம் இதற்கும் ஏற்பட்டுவிட்டது.

Supply And Demand, Glut, Mass Production, Distribution, Advertising, Sales, Display, Promotion, இத்யாதிகளுக்கு இதுவும் ஆட்பட்டுவிட்டது.  நான் பார்த்த ஷெல்·பில் இரண்டு பிராண்டு மாட்டு மூத்திரம் இருந்தது.  இரண்டிலும் லேபில் இருந்தது.  அதில் ஒன்றில் ****- கோமியம்' என்று போட்டிருந்தது. இன்னொன்றில் பெயர்  கிடையாது.  ஒரு லேபிலில் சர்வாலங்கார பூஷிதையாக ஒரு பசுமாடு. அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் பசுமாட்டின் படம்.  இன்னொன்றில் கன்றும் பசுவும்.  கன்று பால் குடித்துக்கொண்டிருக்கிறது.  இதுதான் ரொம்பவும் உதைத்தது.  பசுவின் பாலை விற்பதற்கு இந்தப் படத்தைப் பயன்படுத்தலாம்.  பசுவின் மூத்திரத்திற்கு வேறு மாதிரியாகவல்லவா இருக்கவேண்டும்?  சிவப்பு எழுத்துக்களில் 'அருந்தக்கூடாது' என்றும் லேபிலில் போட்டிருந்தார்கள். 

வீட்டையும் பூஜை செய்யும் இடத்தையும் புனிதப் படுத்துவதற்காக மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்தவேண்டும் என்ற கருத்து வற்புறுத்தப்படுகிறது. அதனால் இந்த நிலை. 

பூஜை செய்யும் இடத்தைப் புனிதப்படுத்துவதற்குச் செய்யவேண்டிய முக்கிய வேலை ஒன்று இருக்கிறது. 
சாணத்தைக் கரைத்து அந்த இடத்தை மெழுகிட வேண்டும்.  யாகம், ஹோமங்களுக்குக் கூட அதை யாரும் செய்வதில்லை. 

அதையும் ஸ்பெஷலிஸ்ட் பூசாரிகள், இந்து சமய இயக்கத் தலைவர்கள் வற்புறுத்தக்கூடும். 

அப்போது மாட்டு சாணத்தையும் ஏதாவது டப்பியில் அடைத்து விதம் விதமாக லேபில் ஒட்டி விற்பார்கள். 

Then they will be selling real Cow Shit.

Now they are already selling Bull Shit.

"நீ பிரதமர் ஆவாய்!"

மலேசியாவின் வரலாறு பல தமிழர்களுக்குத் தெரியாது.  சுருக்கமாகச் சொல்லப்போனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாகரிக நாடுகள் சிலவற்றைக் கொண்டிருந்தது.  ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீவிஜயம் என்னும் பேரரசின் முக்கிய பகுதியாக விளங்கியது. அதன் பின்னர் மஜாப்பாஹிட் என்னும் ஜாவானிய இந்துப் பேரரசின் கீழ் இருந்தது.  சுமாத்ராவிலிருந்து ஓடிவந்த பரமேஸ்வரா என்னும் மலாய் இந்து மன்னன் மலாயாவின் தென்பகுதியில் மலாக்கா என்னும் துறைமுகப் பட்டினத்தையும் ஒரு ராஜ்யத்தையும் தோற்றுவித்தான். பின்னர் முஸ்லிமாக மாறிய அந்த மன்னனின் கீழ் மலாக்கா 'சுல்த்தானேட்' என்னும் அந்தஸ்தைப் பெற்று அந்த வட்டாரத்தின் முக்கிய துறைமுக வாணிப மையமாகவும் மாறியது.

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அது போர்த்துகீசியர்கள் வசமாகியது. அவர்களிடமிருந்து டச்சுக்காரர்களிடமும் கடைசியில் பிரிட்டிஷ்காரர்களிடமும் போய்ச் சேர்ந்தது.  1785-ஆம் ஆண்டு பினாங்குத் தீவில் கால் விரலூன்றிய பிரிட்டிஷ்காரர்கள் மலாயா முழுவதையும் போர்னியோத்தீவின் வடக்கு வடமேற்குப் பிரதேசங்களையும் பிடித்து ஆட்சி புரிந்தார்கள்.  இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பானியர்கள் பிடித்துக்கொண்டனர். 1945-இல் மீண்டும் பிரிட்டிஷ்காரர்கள் கைப்பற்றினர்.  அப்போதிருந்து சுதந்திர உணர்வு மலாயர்களுக்கு அதிகரித்தது.  சுதந்திரம் கொடுத்துவிட்டுப்போக நினைத்த பிரிட்டிஷ்காரர்களுக்கு யாரிடம் கொடுத்து விட்டுப்போவது என்பது ஒரு பிரச்னையாகியது. 

அது ஒரு பெரிய கதை. 

மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் கொண்ட முக்கூட்டுக் கட்சி அணியிடம் 1957-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி நாட்டை ஒப்படைத்தனர்.  சுதந்திர மலாயாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா.  அவர் ரிட்டயர் ஆகிய பின்னர் 'ஸ்டார்' என்னும் பத்திரிக்கையில் The Tunku Tapes என்னும் தொடர் ஒன்றை எழுதுவித்து வந்தார்.  அதில் ஓர் இடத்தில் கூறியிருந்ததாவது:

"என்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்கள் நடந்துவிட்டன. அவற்றைப் புறக்கணிக்கவோ, மறக்கவோ என்னால் முடியாது.  ஓர் இந்திய ஜோதிடரை நான் மறக்கவே முடியாது.  பகடைக்காய்களை உருட்டிப் பார்ப்பவர்.  1939-ஆம் ஆண்டில் நான் கூலிம் என்னும் ஊரில் மாவட்ட அதிகாரியாக இருந்தேன். 
அப்போது ஜப்பானியர்கள்கூட இன்னும் வரவில்லை. பிரிட்டிஷ் ஆட்சி.  அப்போதுதான் அந்த ஜோதிடர் வந்தார்.  என்னைப் பார்த்துவிட்டு, "நீங்கள் ஒரு காலத்தில் மலாயாவின் முதல் பிரதம மந்திரியாக ஆவீர்கள்" என்று சொன்னார். அனைவரும் சிரித்தார்கள். நானும் சிரித்தேன். எப்படி ஒரு சாதாரண மாவட்ட அதிகாரி ஒரு நாட்டின் பிரதமராக முடியும்?  ஆனால் அவர் சொன்னார்: "இப்போது நீங்கள் சிரிப்பீர்கள். சிரியுங்கள். ஆனால் அதைத்தான் கிரகங்கள் காண்பிக்கின்றன."

இது 1939-இல் நடந்தது. 
1957-இல் நான் சுதந்திர மலாயா நாட்டின் முதல் பிரதம மந்திரியாகினேன்......."