Tuesday 27 September 2011

CHATURAKARAADHI


சதுரகராதி



சில ஆண்டுகளுக்கு முன்னர் பினாங்கைச் சேர்ந்த அன்பர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் நடைபெற்ற உரையாடல். 
நல்ல தமிழார்வலர். மறைந்துகொண்டிருக்கும் ஒரு Breed. அவர் மாதிரியான ஆட்கள் இனி மலேசியாவில் மிக அரிதாகவே தோன்றுவார்கள். தோன்றினாலும் அப்படியே அமுக்கி அடக்கி 
அடையாளம்  முகவரி இல்லாமல் செய்து விடுவார்கள். 
பழந்தமிழைப் பற்றிப் பேச்சு சென்றது. 
வீரமாமுனிவரைப் பற்றியும் அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் போது வீரமாமுனிவர் தமிழுக்குச் செய்திருந்த தொண்டுகள் சீர்திருத்தங்கள் முதலிவற்றைப் பற்றி பேசப்பட்டது. 
அவர் இயற்றிய நூல்களில் ஒன்று 'சதுரகராதி' என்று அவர் படித்திருக்கிறார். 
"அது என்ன நூலய்யா? ஏன் அதற்குப் பெயர் சதுரகராதி?"
"அது சதுரமான புத்தகம்", என்று என்னதையாவதைச் சொல்லி யிருக்கலாம் - வேறு யாராவது கேட்டிருந்தால். ஆனால் இங்கோ, பாவம் இந்த மாதிரி உண்மையிலேயே தமிழின்மீது பற்றும் பக்தியும் வைத்திருப்பவர் கேட்கிறார். இவர் மாதிரி எங்கே இந்தக் காலத்தில் இருக்கப்போகிறார்கள்", என்று மனதில் மின்வெட்டுப்போல் ஓர் எண்ணம் ஓடியது. 
விவரித்தேன். 
அது அகராதி நூல்தான். அகராதி என்றதும் இப்போது வழங்கும் டிக்ஷனரி அகராதிதான் மனதிற்கு வரும். 
அகராதி என்பது சொல்லுக்குப் பொருள் கொடுப்பது மட்டுமல்ல. 
அகராதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. 
அவற்றில் நான்கு வகைகளை வீரமாமுனிவர் ஒரே நூலில் தொகுத்துக் கொடுத்திருப்பார். 
அதுதான் சதுர் + அகராதி = சதுரகராதி. சதுர் =நான்கு.

ஒரு பொருளுடைய பல சொற்கள்; இவ்வகைச் சொற்கள் அகரமுதலாக அமைக்கப்பட்டிருக்கும். இது பொருளகராதி. 
ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள்; இதுவும் அகரமுதலாக இருக்கும். இது பெயரகராதி. 
தொகையகராதி என்பது அஷ்டமங்கலம், சப்த சமுத்திரங்கள், பஞ்ச மூலம், நவரத்தினம், நால்வகை உபாயம், மும்மூர்த்திகள், அறுசுவை, தசாவதாரம் என்று எண்ணிக்கை, தொகையின் அடிப்படையில் வகுக்கப் பட்டவற்றை விளக்கியிருப்பார்கள். 
தொடையகராதியில் எதுகைச் சொற்கள் போன்றவை வரிசையாகக் கொடுக்கப்பட்டிருக்கும்.
இவை நான்கும் சேர்ந்தவையே சதுரகராதி.
அவர் இன்னும் சில கேள்விகளைக் கேட்டார்.....

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Monday 26 September 2011

TAMILVANAN AND I



நானும் தமிழ்வாணனும்




        தமிழ்வாணனின் கல்கண்டைப் படித்துத் தமிழில் சரளமாக எழுதுவதற்குக் கற்றவர்களில் நானும் ஒருவன். 
நாங்கள் பள்ளியில் படிக்கும்போது வாங்கிய பத்திரிக்கைகளில் ஒன்று கல்கண்டு.
1957க்கு முன்னாலெல்லாம் அதில் கதைகள், தொடர்கதை, கட்டுரைகள், கேள்வி-பதில் என்று இருக்கும். பிற்காலத்தில் கேள்வி-பதில், தொடர்கதை, வைத்தியம்/தன்முனைப்புத் தூண்டல், 
துணுக்குகள் போன்றவற்றைக் கொண்டு விளங்கியது.
கேள்வி பதில் பகுதிக்கு அந்தப் பேர் போனவர்கள் ஷங்கர்ஸ் வீக்லி பாபுராவ் படேலும், ப்லிட்ஸ் பத்திரிக்கை கராஞ்சியாவும். அப்போது குஷ்வந்த் சிங் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை.
கராஞ்சியா, பாபுராவ் படேலுடன் வரிசைப் படுத்தப் பட்டவர் தமிழ்வாணன்.
இதில் என்ன வேடிக்கை என்றால் என்னுடைய தந்தையார் கல்கண்டை வாங்கி வைத்துக்கொண்டு படித்ததுதான். அவர் இறக்கும்வரை - எழுபத்திரண்டாம் வயது வரைக்கும் வாங்கினார். 
அதில் உள்ள துணுக்குகளை ஒரு தனி நோட்புக்கில் மெனக்கெட்டு எழுதிவைத்துக் கொண்டிருந்தார். 
இப்போதும் அவருடைய நினைவு நாளில் அந்த நோட்புக்கை அவருடைய படத்தின் முன் வைத்து வழிபடுகிறோம்.
நானும் என் தந்தையாரும் சென்னைக்குச் சென்று தமிழ்வாணனைச் சந்தித்தோம். 
அப்போது பல பிரச்னைகளால் மனநிம்மதியை இழந்திருந்தேன். 
தமிழ்வாணனிடம் அவற்றைப் பற்றியும் மனதில் உள்ள கிலேசங்களைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தேன். 
அவற்றைப் பற்றிச் சொல்லச் சொல்ல அவற்றிற்கெல்லாம் தீர்வை என் தந்தையார் சொல்லிக்கொண்டு வந்தார்.
சற்று நேரத்தில் தமிழ்வாணன், "இப்படிப்பட்ட அப்பாவைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு என்னிடம் போய் கேட்கிறீர்களே. மனக்கவலைக்கு மருந்தெல்லாம் நம்மிடமே இருக்கிறது. அதை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துக்கொள்வதுதான்  ஒவ்வொருவரின் கெட்டிக்காரத்தனம்" என்றார்.
அடிக்கடி சத்தம் போட்டு சிரித்தார். 
தமிழ்வாணன் கொடுத்த தெம்பு சிறிதுகாலம் இருந்தது.
மொட்டையாக இருந்தார். அவரை மொட்டைத்தலையராகப் பார்க்கும் போது மனச் சந்தோஷமாக இருந்தது. 
இன்னொரு மொட்டை மண்டையனையும் சென்னையில் அதே ஆண்டில் பார்த்தேன். 
புருவத்தைக்கூட சிரைத்து வைத்துக்கொண்டிருந்த மொட்டையன். தமிழினத் துரோகி. அவனையெல்லாம் பார்த்தது குறித்து வெட்கப் படுகிறேன். 
அந்த மொட்டையனால் ஏதும் உதவியும் இல்லை.
ஈழத்தில் ஏற்பட்ட தமிழினப் பின்னடைவு குறித்து பாதாம் அல்வாவை குலோப் ஜாமூனில் பிசைந்து சாப்பிட்டிருப்பான், அந்த ஆள். 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday 23 September 2011

KUNGUMA POO

குங்கும மாஹாத்மியம்


SAFFRON FLOWER




Changes And Substitutes என்னும் இழையை எழுத ஆரம்பிக்கும்போது இவ்வளவு தூரம் அதற்கு Impact இருக்கும் என்று தோன்றவில்லை.  


நான் எதையும் புதிய விபரங்களாகக் கூறவில்லை. உங்களில் பலர் அவற்றையெல்லாம் அறியாமல் இருந்திருக்கலாம். அறிந்திருந்தாலும் அவற்றைப் பற்றி சிந்தியாது இருந்திருக்கலாம். சிந்தித்து இருந்தாலும் அதை எந்த அரங்கிலும் சொல்லாமலும் இருந்திருக்கலாம்.  குறைந்தபட்சம் அடிக்கும் அரட்டையில்கூட எடுத்து விட்டிருக்க மாட்டீர்கள்.   முக்கியமாகப் பட்டிருக்க மாட்டாது.
குங்குமம் என்னும் பொருளை நெற்றியில் வைக்கிறோம்.  திலகமாக வைக்கப்படும் அசல் ஆதி காலத்துக் குங்குமம் என்பது ஒரு மலரின் மகரந்தக் காம்பு. குங்குமப்பூ என்பது காஷ்மீர் போன்ற சில இடங்களில் வளரும் தாவரம் ஒன்றின் பூ. அந்தப் பூவில் செந்நிறமான மகரந்தக் காம்புகள் நீட்டிக்கொண்டிருக்கும். ஒரு பூவில் முன்று அல்லது ஐந்து காம்புகளே இருக்கும். 


இந்தப் பூக்களைப் பறித்து, அவற்றிலிருந்து காம்புகளை மிகவும் பதனமாக நீக்கி எடுத்துச் சேர்ப்பார்கள்.   இந்த மகரந்தக் காம்புகளுக்கு நறுமணமும் இளஞ்செந்நிறமும் உண்டு.  இதற்கு மருத்துவ குணமும் உண்டு. 

குங்குமப் பூவின் மகரந்தக் காம்புகளைக் காயவைத்து பதப்படுத்தித் தயாரிக்கிறார்கள்.  இதைப் பன்னீர் விட்டு உரசுகல்லில் உரசி எடுத்து, அதைக் குங்குமப் பொட்டாக அணிந்தார்கள்.  இதையே அதிக அளவில் செய்து உடலிலும் தடவிக்கொள்வதுண்டு.  இதைத்தான் குங்குமக் குழம்பு என்பார்கள்.  
 
அம்பிகையின் தியான சுலோகத்தில், 

 "சகுங்கும விலேபனாம் 
 அளிக ஸ¤ம்பி கஸ்தூரிகாம் 
ச மந்தஹஸி தேக்ஷணாம் 
ச சர சாப பாசாங்குசாம்
அசேஷ ஜன மோஹிணீம் 
அருணாமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸ¤மபாஸ¤ராம்
ஜபவிதௌ ஸ்மரேத் அம்பிகாம்".


என்று வரும். 

குங்கும வர்ணம் உடையவள், உடைகளும் அதே வண்ணம். அதனுடைய வண்ணத்தையே இந்தப் பிரபஞ்சமெங்கும் நீக்கமறப் பிரகாசிக்கச் செய்கிறாள். 

"அருண கிரணஜாலைரஞ்சித ஆசவகாசா"

அவளுடைய செந்நிறத்தை வாங்கியே, இயற்கையில் ஸ்படிக நிறமுள்ள சிவனும் சிவந்தவர் ஆகிறார்.

அபிராமி பட்டர் அம்பிகையின் வடிவத்தைப் பற்றிச் சொல்லும்போது இளஞ்சூரியன், மாதுளம்பூ, குங்கமத் தோயம் என்று நிறத்தை வர்ணித்திருப்பார்.

குங்குமப் பூச்சில் குங்குமப் பூவை பன்னீர் விட்டு உரசுவார்கள். இதிலேயே பச்சைக் கற்பூரத்தையும் சேர்ப்பதுண்டு.   ஆனால் இதெல்லாம் விலை அதிகமான சமாச்சாரம். 

நடைமுறையில் நாம் பயன்படுத்தும் குங்குமம் வேறு வகையில் செய்யப்படுகிறது.   சுத்தமான குண்டு மஞ்சளை எலுமிச்சஞ் சாற்றில் ஊற வைத்து, படிகாரம்-வெங்காரம், நல்லெண்ணெய் முதலியவற்றுடன் செய்யப்படுகிறது. கஸ்தூரி, கோரோஜனை, போன்ற சில வாசனைப் பொருள்களையும் சேர்ப்பதுண்டு.   கையால் இடிக்கப்பட்டு,சல்லாத் துணியால் சலிக்கப்பட்டு தயாரிக்கப்படுவது. இதை 'வஸ்த்ரகாயம்' என்பார்கள்.   ஆள்காட்டி விரலை இதில் லேசாகத் தோய்த்து எடுத்து இடது உள்ளங்கையின் மணிக்கட்டு ஓரத்திலுள்ள சந்திரமேட்டில் தேய்த்துப் பார்த்தால் அந்த இடம் மஞ்சளாக Stain ஆகும்.   ஆனால் இப்போது பெரும்பாலும் அந்த மாதிரியெல்லாம் குங்குமத்தைச் செய்வதில்லை.
குங்குமம் என்ற பெயரால் பல Substitute-கள்.

அவற்றை வைத்துத்தான் உயர்குடி மக்கள் ஸ்ரீசக்ரப் பூஜைகளைச் செய்துவருகிறார்கள்.   அவர்களுக்கென்ன. ஸ்ரீசக்ரம், ஸ்ரீவித்யா, தேவீ மாஹாத்ம்யம் என்று வரும்போது அவர்கள் வைத்ததுதானே சட்டம். அது அவர்களுக்கே உரிய பிரத்தியேக உரிமையான வழிபாடாக அவர்கள் சாதிக்கிறார்கள். அவர்கள் சொன்னால் அது குங்குமம்தான். அட்டியில்லை.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday 15 September 2011

BRAHMA CONFUSION


பிரம்ம குழப்பம்

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே வாரத்தில் எனக்கு இரண்டு அழைப்பிதழ்கள் வந்திருந்தன.
ஒன்று, வீடு குடிபுகு விழா.
இன்னொன்று திருமணம்.


வீடு குடிபுகுதல் மலேசியா நேரம் 5-00 மணிக்கு. திருமணம் அடுத்த மாத ஆரம்பத்தில். 4-00 am - 5-00 am. அதைக் காலை என்று சொல்வதா என்னவென்று சொல்வது, தெரியவில்லை. உஷத் காலம் என்று சொல்லலாம் என்று பார்த்தாலும், ஒரு குரல் கேட்கிறது.
"எலேய்...யின்னாபா டபாய்க்கிறெ. மூவாயிரம் வருசமா ஆளப் பத்தின நியூஸ் ஒன்னுமில்லையே' இன்னதும் 'வேத காலத்தோட ஆளு அபேஸ்'னு நெனச்சுக்கினேல நீ? ஓம்பாட்டுக்கு சரடா வுடுறே? நானு எப்பப்பா அந்த நேரத்துல வந்திருக்கேன்?" என்ற கேள்விக்குரல் கேட்கிறது.
"யார்ராது?" என்று பார்த்தால் நம்ம 'உஷை'.
சூரியன் எழுமுன்னர் நிலவும் நேரம். வேத காலத்தில் ஒரு தேவதையாக வழிபடப்பட்டிருக்கிறாள். வேண்டுமென்றால் பின்னிரவு வேளை என்றும் சொல்லலாம்.
உஷத் காலத்துக்கும் முந்தின நேரம்.
மலேசியாவில் லோக்கல் நேரப்படி சராசரி காலை 7-20க்குத்தான் சூரியன் உதிக்கும். ஏனெனில் கிழக்கு மலேசியாவை அனுசரித்து நேரத்தை அட்ஜஸ்ட் செய்துவைத்திருக்கிறார்கள். மஹாராஜராஜஸ்ரீ மஹாகுலோப்ஜாமூன் மாஹாதீர முஹம்மதுவாகிய பழைய பிரதமர் கட்டளையிட்டுள்ளார் அல்லவா?
கட்டபொம்மன் படத்தில் வரும் பானர்மேன் ஜாவர் சீதாராமன் சொன்ன மாதிரி, "கிழக்கே உதிக்கிறதே சூரியன்..... அது எங்களைக் கேட்டுத்தான் எழும்.....  விழும்..." என்பதுபோல.

மலேசியாவில் ஜோதிடர் என்று தங்களையே கூறிக்கொண்டு பணம் பண்ணும் பேர்வழிகள் அனேகருக்கு ஜோதிடம் தெரியாது. பூசாரிகளும் சோசியம் பார்ப்பதாகச் சொல்லிக்கொள்வார்கள்.
அவர்களுக்கு நல்ல நேரம் பார்க்கவும் தெரியாது.
பஞ்சாங்கத்தில் போட்டிருக்கும் சுபமுகூர்த்தத்தில் திருமணத்தைச் செய்வதற்கு தோது இருக்காது. ஆகவே வசதியான நாளில் வசதியான நேரமாகக் கேட்பார்கள். ஜோதிடருக்குத் தெரிந்த குறுக்குவழி, 'ப்ரம்ம முகூர்த்தம்'தான்.
'ப்ரம்ம முகூர்த்தம்'?
சூரியன் உதிப்பதற்கு முன்னால் நிலவும் அந்த ஒன்றரை மணி நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். தோஷமில்லாத வேளைகளில் பிரம்மமுகூர்த்தமும் ஒன்று.
'முகூர்த்தம்'?
'மூணே முக்கால் நாழிகை' என்ற கணக்கைக் கேட்டிருக்கிறீர்களா? பழைய கதைகளையெல்லாம் படித்தால் - அதாவது 'மயில்ராவணன் கதை' மாதிரியுள்ளதையெல்லாம் படித்தால் -  அவற்றில் இது அடிக்கடி வரும். மாயம் ஜாலவித்தை கண்கட்டு வித்தையெல்லாம் மூணேமுக்கால் நாழிகைக்குத்தான் நிற்குமாம். அதன் பின்னர் அவை செயல்படாது என்று சொல்வார்கள்.
ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்.
அப்போ மூணே முக்கால்........ம்ம்ம்ம்ம்ம்ம்........முண்ணாங்கே பன்னண்டுக்கு ரெண்டு....மீதி ஒண்ணு.....மூவிரண்டாறு ஒண்ணும் ஏழு .......எழுவத்திரெண்டு.......இருவத்திமுக்கா, பதினஞ்சு.....நாமுக்கா மூணு. பதினஞ்சும் மூணும் பதினெட்டு...னெட்டு...னெட்டு..னெட்டு. பதினெட்டும் எழுவத்திரெண்டும்...தொண்ணூறு.......தொண்ணூறு....தொண்ணூறு.....தொண்ணுற அறுவதால வகுத்தா.....ஒண்ணர.......ஒன்றரை மணி நேரம். சரிதானுங்களா?
தோஷங்களில்லாத நேரம் பார்ப்பதற்கும் ஜோதிடத்தில் விதிகள் நிறைய இருக்கின்றன. அதையெல்லாம் யார் கற்றுக்கொண்டிருப்பது?
ஏசுநாதர் சொல்லிக்கொடுத்த தம்பிரான் வணக்கத்தில் காணப் படுவதைப் போல, "இன்று எமக்குத் தரவேண்டிய அப்பத்தைத் தாருமையா", என்ற போக்கு.
கொஞ்சம் வித்தியாசம். இந்த மாதிரியான ஜோசியர்கள், பூசாரிகள் எல்லாருமே அந்தப் பிரார்த்தனையைச் சற்று மாற்றிக்கொள்வார்கள். "அப்பத்தைக் ஸ்பெஷல் அப்பமாகவும், முட்டை, கிட்டை, தேங்காய்ப் பாலெல்லாம் ஊத்தி, மத்தவனுக்கு ஞாயமாக் கெடக்கிறதையும் சேத்து எனக்கே கெடக்கிறமாதிரியும் குடுய்யா", என்று சேர்த்துக்கொள்வார்கள்.


அப்படியாப்பட்டவர்கள்தான் நேரம் குறித்துக்கொடுப்பார்கள்.


சூரியன் உதயமாகும் நேரம் பலருக்குச் சரியாகத் தெரியாது. அவர்களுக்குக்  காலை 6-00 மணிக்கு சூரியன் உதிக்கும்; உச்சிவேளை என்பது 12-00 மணி. சாயரட்சை 6-00pm. சூரியன் மறையும்.


அதேதான் நிகழ்ந்திருக்கிறது. காலை ஆறுக்கு முன்னால் உள்ள நேரம் பிரம்ம முகூர்த்தம் என்று எண்ணி, அவ்வாறே 5-00லிருந்து 6-00க்கு புதுமனை புகுவிழா என்று வைத்துக்கொடுத்திருக்கிறான். இன்னொருவனோ இன்னும் மேதாவி - மேல் + தாவி. இன்னும் மேலுக்கு - முன்னால் போய்விட்டான்.
ஆகவேதான் 4-00 - 5-00.


4-00 மணி என்பது ஒரு தினுசான நேரம். அப்போதுதான் பேய்க்கணங்கள் திரியும் என்பார்கள். ராட்சத வேளை என்று கருதுவார்கள்.                     அவ்வேளையில்தான் பல விபத்துக்கள், பிள்ளைப்பேற்றில் சிக்கல்கள், மாரடைப்பு, இறப்பு போன்றவை நிகழும் என்று புள்ளி விபரங்கள் கூறும்.


அது சரி.
இவர்களையெல்லாம் திருத்தமுடியாதா?


எப்படி முடியும்?
அதான் ஆப்பம்...அதுவும் முட்டை தேங்காய்ப்பாலுடன் அடுத்தவன் ஆப்பமும் சேர்த்துக் கிடைக்கிறதே!


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday 14 September 2011

UNWANTED SECRET

வேண்டப்படாத ரகசியம்


         சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது இது........
         மலேசியாவின் முக்கிய முருகன் தலங்களில் ஒன்றாக உள்ளத கோலாலும்ப்பூரின் பத்து மலை - Batu caves. 
'Batu என்றால் மலாய் மொழியில் 'பாறை' அல்லது 'கல்'. அது ஒரு பெரிய சுண்ணாம்புப் பாறை- limestone; அதுதான் குன்றாக நிற்கிறது.
பன்னெடுங்காலமாக அந்த குன்றின்மீது விழும் மழை, படியும் பனி ஆகியவை எப்போது வடிந்துகொண்டேயிருக்கும்.
அதன் காரணத்தால் பெரும் பெரும் துளைகள், துவாரங்கள், குகைகள், குடம்புகள், stallagmites, stallagtites ஆகியவற்றைக் காணலாம். 
18-ஆம் நூற்றாண்டில் அந்தக் குன்றில் உள்ள பெரிய குகையொன்றில் முருகனை வழிபடலாயினர். 
அந்த வழிபாடு நாளடைவில் மிகச்சிறப்புப் பெற்றுவிட்டது. இப்போது தைப்பூசத்தின்போது பத்து லட்சத்துக்கு மேல் மக்கள் கூடும் விழா அங்கே நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பால்குடங்களும் காவடிகளும் அங்கு எடுக்கப்படுகின்றன.
சாதாரண நாட்களிலும்கூட அது ஒரு முக்கியமான பயணிகள் கேந்திரமாக விளங்குகிறது. 
அன்று ஒரு விசேடமான நாள். அதிலும் ஒரு குறிப்பிட்ட நேரம் அதி முக்கியமானது. 
ஆகவே அங்கு சென்றிருந்தேன்.
அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே அங்கு சென்றுவிட்டோம். 
தாகசாந்தி செய்துகொள்ளலாம் என்று அங்கிருந்த ஹோட்டலில் தேநீர் அருந்தச் சென்றோம். அங்கு, பக்கத்து மேசையில் நான்கு பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது சில தமிழ்ப்பாட்டுக்களைச் சொல்லி ரசித்துக்கொண்டிருந்தனர். 
அங்கிருந்து வரும்பொது அந்த பெண்களிடம் அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தைச் சொல்லிவிட்டு வந்தேன். அவர்கள் நிமிர்ந்து பார்த்துவிட்டு, "அப்படியா?" என்றார்கள்.

அதன் பிறகு நாங்கள் குகைக்குச் சென்றோம்.
அங்கு திரிந்த  தமிழர்களிடம் சொன்னால் எடுபடாது என்ற அச்சம். எடுபடக்கூடிய தமிழர்களாக அங்குள்ளவர்கள் தோன்றவில்லை. 
ஆகவே அங்கிருந்த இரண்டு வெள்ளைக்காரப் பெண்மணிகளிடம் சொன்னேன். 
முதல் பெண், நான் சொல்லச்சொல்ல நகர்ந்து பின்பக்கமாகப் போனாள். அடுத்தவள் பிரிட்டிஷ்காரி. கொஞ்சம் ஆர்வம் காட்டினாள். இன்னொரு ஜப்பானிய இளைஞனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டான்.

அதன்பின்னர் அங்கிருந்து திரும்பி வரும்போது, ஒரு கறுப்புப்பையைத் தோளில் தொங்கப்போட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் சிறிய சிறிய பிளாஸ்ட்டிக் பைகளில் இருந்த ஏதோ பொருள்களை வருகிறவர் போகிறவர்களிடம் விற்றுக்கொண்டிருந்தான். 

கோயில் வாசலில் ஒரு நரிக்குறவன். அவன் வியாபார மும்முரத்தில் இருந்தான். செத்த நரியின்றின் மண்டைத்தோலை உரித்து விலக்கி, அதன் மண்டையோட்டில் நீட்டிக்கொண்டிருந்த முட்களைக் காட்டி, நரிக்கொம்புகளை விற்றுக்கொண்டிருந்தான்.

அங்கிருந்து வரும்போது, கைரேகை ஜோதிடம் சொல்வதாக ஒருவர் அந்தப் பக்கத்தில் ஒரு ஸ்டாலில் ஒரு மேசையைப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். அவரிடம் கையை நீட்டிய ஓர் ஆளின் உள்ளங்கையைப் பார்த்துவிட்டு, அதனை இன்னும் நன்றாகப் பார்க்கவேண்டும் என்பதற்காக ஒரு பூதக்கண்ணாடியைத் தன்னுடைய கறுப்புத் தொங்கு பையிலிருந்து எடுத்தார்.
அவரின் இடத்தைத் தாண்டி நாங்கள் இளநீர் அருந்த ஸ்டாலுக்குச் சென்றோம். சற்று நேரத்தில் அந்த நரிக்குறவன் தோளில் ஒரு கறுப்புப்பையைத் தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு வியாபாரம் முடிந்து சென்றுகொண்டிருந்தான். 

எனக்கு மனதில் ஓர் அடி. 'என்னடாது. எவ்வளவு பெரிய விஷயத்தை இவர்களிடம் சொல்கிறோம். சற்றும் எடுபடவேயில்லையே?'

மனத்தாங்கலுடன் காரில் ஏறினேன்.
ஏறுமுன் என் தோளில் தொங்கிக்கொண்டிருந்த பையை - கறுப்புபையை - பின்ஸீட்டில் போட்டேன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday 8 September 2011

TIGER! TIGER!!


புலியும் கிலியும்




முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் காடு மலைப் பகுதியில் வேலை பார்த்ததாக அவ்வப்போது சொல்லியிருக்கிறேன்.


புலியின் கர்ஜனையை அவ்வப்போது அங்கு கேட்டிருக்கிறேன். 

நான் அங்கு செல்வதற்கு முன்னால் குவாலா ப்ராங் என்னும் அந்த சிற்றூர் வேறு மாதிரியாக இருந்திருக்கிறது. வீடுகள் எல்லாமே மரத்தூண்களின்மேல் கட்டப்பட்டிருக்கும். இந்த மரத்தூண்கள் ஆளுயரத்துக்கு மேலாக இருக்கும். 

இரவுகளில் பல சமயங்களில் புலிகள் ஊருக்குள் வரும். அந்த உயரமான வீடுகளின் அடியில் படுத்திருக்கும். அப்போது அங்குள்ள நாய்கள் பூனைகள் கோழிகள் எல்லாமே மிகவும் நிசப்தமாக இருக்கும்.   நாய்களோ பூனைகளோ இருக்கும் இடத்திற்கு அருகில் புலி வந்தால் அவை அப்படியே ஸ்தம்பித்துப்போய் இருக்கும்.  புலி அப்படியே கடித்துத் தின்றுவிட்டுப் போகும்.   பக்கத்தில் வேறு ஏதாவது நாயோ பூனையோ இருந்தால் அதுவும் ஸ்தம்பித்துப்போய் இருக்கும்.   எவையுமே ஓடிப்போக இடமிருந்தாலும் ஓட மாட்டா. 

பாயப்போகும் புலி தன்னுடைய விழிகளைத் தான் குறிபார்த்திருக்கும் ஆளை விழித்துப் பார்த்து பற்களைக் காட்டி உறுமும். ஓடுவதற்கும் முடியாத செயலற்ர நிலை ஏற்படும்.

'புலியடிக்கும் முன்னர் கிலி அடிக்கும்' என்று நம்ம ஆட்கள் சொல்வார்கள். 
அந்த 'கிலி' என்பது Panic Situation என்பதால் ஏற்படும் Fear Paralysis என்பது.   கால் கைகள் விரைத்துப்போய் கூச்சலிடவும் முடியாத ஸ்தம்பன நிலை அது.   மூளையில் அமிக்டாலா என்னும் ஒரு பட்டாணி அளவு உள்ள இடத்தில் இதன் மூலம் இருக்கிறது.   மூளை நரம்புகள் - அதாவது மூளையிலிருந்து நேரடியாகப் பிறக்கும் நரம்புகள் பன்னிரண்டு உள்ளன. இவற்றை Cranial Nerves என்று சொல்வோம்.   மற்ற நரம்புகள் முதுகுத்தண்டினுள் இருக்கும் பெரும்நரம்பிலிருந்து வரக்கூடியவை.   க்ரேனியல் நரம்புகளில் ஒன்று வேகஸ் எனப்படும்.   இது இருதயத்துடன் தொடர்பு கொண்டது.   வேகஸ் நரம்பில் இம்ப்பல்ஸ் எனப்படும் உணர்வு அதிர்வுகள் மிக வேகமாகச் சென்றால் இருதயத் துடிப்பைப் பாதிக்கும்.   இன்னும் அதிகமாகினால் இருதயம் நின்றுவிடும். Cardiac Arrest என்னும் நிலை ஏற்படும்.   அதீத பயம் ஏற்படும்போது வேகஸ் ஸ்ட்டிம்யுலேஷன் ஏற்பட்டு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு விடும்.   இதுவும் கிலியடிப்பது என்பதுதான்.

பேயைத் திடீரென்று பார்க்க நேரிடும்போது இதே மாதிரியான Fear ParalysisCardiac Arrest என்பவை ஏற்படக்கூடும்.  VooDoo Death என்பதுவும் பயத்தால் ஏற்படுவதுதான். யாராவது மந்திரவாதி ஏதாவது மந்திரக்கோல் மாதிரிப்பட்ட கோலையோ எலும்பையோ காட்டினாலோ, சுடுகாட்டுச் சாம்பலை ஊதிவிட்டாலோ, அந்த பயம் ஆள்மனதுக்குள் அழுத்தமாகப் பதிந்து, வியாதிகளின் கூறுகளைத் தோற்றுவிக்கும். மருத்துவத்துக்கும் கட்டுப்படாமல் மரணத்தை ஏற்படுத்தும். பல சமயங்களில் உடனடியாக இருதயத்தையும் நிறுத்திவிடும்.   அதீத பயத்தின் கூறுகள், தன்மைகளை ரொம்ப ரொம்ப ரொம்ப எளிமைப்படுத்திச் சொல்லியிருக்கிறேன்.  

பயத்திலேயே இன்னும் வெளிப்படையான பலவகைகள் உண்டு.   பேயே இல்லாமல், 'சந்திரமுகி வடிவேலு' போல "மாப்பூ..... வச்சுட்டாண்டா ஆப்பூ.." என்று அலறியவாறு ஸ்தம்பித்து நிற்கும் நிலையும் Fear/Panic Paralysisதான்.   ஆனால் உள் ஆழத்தில் அவை எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதாம்...



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Sunday 4 September 2011

ABOUT THANGABASPAM

தங்கபஸ்பம் பற்றி.......


சிலநாட்களுக்கு முன்னர் 'தங்கபஸ்பம்' என்னும் மருந்துப்பொருள் பற்றி எழுதியிருந்தேன்.   இது குறித்து சிலர் நையாண்டியாகக் கேள்விகள் எழுப்பி, நையாண்டியான கருத்துக்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். 
குறிப்பாக எம்ஜீயார் சம்பந்தமான விஷயங்கள். போதாததற்கு வைரமுத்துவின் 'படையப்பா' பாட்டு.

'தங்க பஸ்பம்' என்பது ஒரு முக்கியமான மருந்து. இது தமிழர்களிடையே புழக்கத்தில் இருந்தது. 'தெரிந்த பெயர், தெரியாத விஷயம்' என்று சொல்வார்கள்.

ஆகவே இதைப் பற்றி என்னிடம் இருந்த சில நூல்கள், நான் கேள்விப்பட்ட விஷயங்கள் முதலியவற்றை வைத்து சுருக்கமாகத் 'தங்கபஸ்பத்தை' எழுதி வெளியிட்டேன். 

இதன் தொடர்பாகக் காயகல்பம், Rejuvenation, Longevity, அதிபலம், அதிவேகம், 
அதிபோகம், அதிபுத்தி, புலன்களின் தீட்சண்யம் போன்றவற்றைப் பற்றிய கேள்விகள், டிஸ்ஷன் போன்றவை இருந்திருந்தால் திருப்தியாக இருந்திருக்கும்.

நான்தான் அந்தக் கட்டுரையின் முடிவிலேயே, 'சரியான முறை இல்லாமல் போனால் 'ஹோகயா' என்று எழுதிவிட்டேனே. 

தங்கபஸ்பம் மட்டுமில்லை..... எந்த மருந்துமே - உங்கள் Aspirin-இலிருந்து Zopiclone வரைக்கும் எல்லாவற்றுக்குமே டாக்ஸிஸிட்டி உண்டு. 

ரொம்ப நாளைக்கு முன்னால் ஒரு படம். 'மிஸ் மாலினி'. ஹீரோயின் புஷ்பலதா. அவருடைய வேலைக்காரி சுந்தரிபாய். 
சுந்தரிபாய் ஒரு பாட்டுப் பாடுவார்......

"பலே ஜோர்... பலே ஜோர்.... பட்டனவாசம் நான் பாத்துப்பிட்டேன் பாத்துப்பிட்டேன், பணத்துக்கு நாசம்" 

என்ற பாட்டு. 

அதில் வரும் அடிகள்,
"தலவலிக்கொரு மாத்திரெ, தடுமனுக்கொரு மாத்திரெ 
தவறிப்போயி போட்டுக்கிட்டா தர்மலோக யாத்திரெ" 

என்று இருக்கும். 

இதேதான் எல்லா மருந்துக்கும். அமுதம்கூட விஷமாகும். 


தங்க பஸ்பம் இதற்கு விதிவிலக்கல்ல.


இந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்தியர்கள் தங்கபஸ்பத்தைப் பயன்படுத்தியே வந்திருக்கின்றனர்.  தங்க பஸ்பத்தால் கெடுதல் மட்டுமே உண்டு என்றிருந்தால் இத்தனை ஆண்டுகளாக அதைப் பயன்படுத்தி வந்திருப்பார்களா? 

அரசர்களில் பலர் தங்கபஸ்பம் சாப்பிட்டவர்கள்தாம். அவர்களுக்கு அந்த மருந்து ஊறு செய்திருந்தால், அதைக் கொடுத்த வைத்தியர்களைத் தோலை உரித்திருப்பார்கள், அல்லது போனால் போகட்டும் என்று கழுவில் ஏற்றியிருப்பார்கள். தங்கபஸ்பம் என்னும் உருப்படியே இண்டியன் ·பார்மக்கோப்பியாவில் இருந்து அகற்றப்பட்டிருக்கும். அதற்குப் பதில் 'விஷ சாஸ்திர சிந்தாமணி'யில் இடம் பெற்றிருக்கும்.  அந்தக் காலத்தில் Slow Poison வகையறாவுக்கு மிகவும் கிராக்கி இருந்தது.

நையாண்டி செய்யலாம். நானேகூட நையாண்டியை ஒரு கலையாகவே வளர்த்து வைத்திருக்கிறேன். நையாண்டி கெட்டிக்காரத்தனமாக இருக்கவேண்டும்.  அசட்டுத்தனமாக இருக்கக்கூடாது. 

அந்தக் காலத்தில் Court Jester என்னும் விதூஷகர்களை அரச சபையில் வைத்திருந்தார்கள். அவர்கள் பல கோமாளித்தனங்கள், நையாண்டிகள் செய்வார்கள்.  

கொஞ்சம் தப்பினால் போச்சு. 

"Off with his head!!!"

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Friday 2 September 2011

DISAPPEARING MYSTICAL ARTS-#1


காணாமற் போகும் கலை


சரம், சர ஓட்டம், சரநூல் என்று உங்களில் சிலராவது கேள்விப் பட்டிருப்பீர்கள். இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'சரம்' என்பது அடிப்படையில் மூச்சும்(சுவாசம்) அதன் நடைகள், ஓட்டங்கள், மடை மாற்றங்கள் முதலியவையும்.

மூச்சை சித்தர் பரிபாஷையில் 'ஆறுகால் குதிரை' என்று குறிப்பிடுவார்கள். சித்தர் நூல்களில் 'ஞானசரநூல்' என்றொரு நூல் இருக்கிறது.   திருமந்திரத்திலும் பல இடங்களில் திருமூலர் இதனைப் பற்றி குறிப்பிடுகிறார்.  

சரத்தை அறிந்தவர்களுக்குப் பலவகையான சித்திகள் கைவரப் பெறும்..

நடிகர் 'சரத்'குமார் எந்த வகையான சரத்தைப் பிடித்து சித்தியைக் கைப்பிடிக்கப் பெற்றார் என்பது தெரியவில்லை. 

"சரம் ஆடுபவனிடம் சுரம் பாடாதே; வாராஹிக்காரனிடம் வாயாடாதே", என்ற சொல் வழக்குகள் இருக்கின்றன. சரத்துக்கு அவ்வளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறது.

மூக்கில் இரண்டு துவாரங்கள். அவற்றை நாசித் துவாரங்கள் என்று சொல்வார்கள்.  ஒரு விஷயத்தை மிகப் பெரும்பாலோர் கவனித்திருக்க மாட்டார்கள். இரு பக்கத்து நாசிகளிலும் ஒரே சமயத்தில் சமமாக மூச்சு ஓடாது.  சில சமயங்களில் வலது பக்க நாசியில் மூச்சு அதிகமாக வரும். வேறு சமயங்களில் இடது பக்க நாசியில் வரும். அவ்வப்போது வலமிருந்து இடப் பக்கத்துக்கு மாறும்.  இடமிருந்து வலத்துக்கும் மாறும். 
இடப் பக்கத்து நாசியில் சுவாசம் அல்லது மூச்சு ஓட்டத்துக்கு 'இடகலை' என்றும் வலப் பக்கத்து மூச்சு ஓட்டத்துக்குப் 'பிங்கலை' என்றும் சொல்வார்கள்.  இடகலையைச் 'சந்திர கலை' என்றும், பிங்கலையை 'சூரியகலை' என்றும் குறிப்பிடுவார்கள்.

இது ஓர் அரிய கலை. அற்புதக் கலை. அதிசயக் கலை. 

மனிதனை 'அதிமனிதன்' என்னும் Superman ஆக ஆக்கக்கூடியது.  இந்தக் கலைகளின் கலையைப் பற்றிய அறிவும் திறமையும் பலவகைக் காரணங்களுக்குப் பயன்படும். காரியங்களுக்கும் பயன்படும். 

ஒருமுறை மலேசியாவின் இந்து சமய இயக்கம் ஒன்றின் தலைவர்களில் ஒருவர் 'வடகலை, பிங்கலை' என்று குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தார். கேட்கவே வேடிக்கையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.  'வடகலை', 'தென்கலை' என்னும் சொற்கள் ஸ்ரீவைஷ்ணவம் என்னும் சமயத்தின் இரு பெரும் பிரிவுகள். 'இடகலை', 'பிங்கலை' என்பன சர சாஸ்திரம் சம்பந்தப்பட்டவை.  இரண்டையும் சேர்த்துக் குழப்படி செய்துகொண்டிருந்தார். 

மலேசியாவில் சமய இயக்கத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு விஷயம் தெரிந்திருக்க வேண்டியதில்லை என்று சொல்லப்படுகிறது.  அந்த குறிப்பிட்ட தலைவரைக் கேட்டபோது அவர்களுக்கே உரிய வழக்கப்படி, "We are executives. We run the organisation. You people have vast knowledge. You can deal with that. Since you are there, we don't have to meddle with such matters", என்று சமத்காரமாகச் சொன்னார். ("நாங்கள் நிர்வாகிகள். சமய இயக்கத்தை நாங்கள் நடத்துவோம். உங்களுக்குப் பரந்த ஞானம் இருக்கிறது. நீங்கள் அவற்றைக் கவனித்துக் கொள்ளுங்கள். நீங்களெல்லாம் இருப்பதால் நாங்கள் ஒன்றும் அந்த விஷயங்களில் தலையிட வேண்டியதில்லை"). 

அதெல்லாம் வஞ்சகப் புகழ்ச்சி. வஞ்சப் புகழ்ச்சியல்ல.  மற்றவர்களென்றால் உச்சி குளிர்ந்துபோய் வடிந்திருப்பார்கள்.

ஆங்கிலத்தில் அல்லவா சொன்னார். ஆகவே, நான் பதில் சொன்னேன், "I am also an executive. I am a CEO of a hospital. I know about these things and was trained for this stuff. And as you have put it nicely, I also possess vast knowledge. And I am involved with religious movements and organsations and I also do organisational work and I teach and give lectures in religion. Don't you think that I would make a better president? With my vast knowledge, expertise, experience, and leadership qualities?" (நானும் ஒரு நிர்வாகிதான். ஒரு மருத்துவ மனைக்குத் தலைமை நிர்வாகி. இந்த மாதிரி நிர்வாகத்தில் பயிற்சி பெற்றவன்.  நீங்கள் மிக அழகாகச் சொன்னமாதிரி பரந்த ஞானமும் இருக்கிறது. சமய இயக்கங்கள், சமய நிகழ்ச்சிகளின் ஏற்பாடு முதலியவைபற்றி தெரியும். அத்துடன் சமயத்தைச் சொல்லிக் கொடுப்பதோடு, பல சமய உரைகளையும் நிகழ்த்துகிறேன். அப்படியிருக்கும்போது, பரந்த ஞானம், திறமை, அனுபவம், தலைமைத்துவ நிபுணத்துவம் ஆகியவற்றை அதிகமாகக் கொண்ட நான், இந்த இந்து இயக்கத்திற்கு இன்னும் சிறந்த தலைவராக இருப்பதற்கு, எனக்கு அதிகத் தகுதி இருக்கிறது அல்லவா?)

அந்த ஆளின் திமிர் எங்கே போகும்?
ஆனானப்பட்ட இந்து சமயத் தலைவர் அல்லவா?
சொன்னார்.
"Sure, sure. This year we have elections. You can file your nomination."("நிச்சயமாக, நிச்சயமாக. இந்த ஆண்டு நாங்கள் தேர்தலை வைத்திருக்கிறோம். நீங்கள் நாமினேஷனைப் போடலாமே!"). 

ஓர் அரசியல் தேர்தலைவிட மோசமான தேர்தல். அதில் நின்று ஜெயிக்கவா?  இதெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்.
எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால், நம் அரியகலைகளில் பல இந்த மாதிரி 'ஸெட்டாப்பு'களால்(set-up) அழிந்துகொண்டு வருகின்றன.  அதனால்தான் ஓர் அரியகலையின் பெயர்கூட அறிந்து கொள்ளப் படாமல் இருக்கிறது.

சரத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் எழுதுகிறேன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Thursday 1 September 2011

THANGA BASPAM



தங்கபஸ்பம்


       தாதுபுஷ்டியைத் தொடர்ந்து தங்கபஸ்பத்தைப் பற்றி கேள்வி ஏற்படும். 
சில உரைகளின்போதும் தனிப்படவும் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள்: 


1. தங்க பஸ்பம் என்று ஒன்று இருக்கிறதா? அல்லது சித்தரியலில் கண்ட உருவகமா?


2. தங்க பஸ்பத்தில் உண்மைலேயே தங்கம் சேர்கிறதா? 


3. இதைச் சாப்பிடுவதால் இளமை திரும்புமா? 


4. இது விஷத்தன்மை படைத்ததா? 


தங்கபஸ்பம் என்பது ஆயுர்வேத மருந்துகளில் ஒன்று.  
அதனைச்செய்யுமுறைகள் வேறுபடும். தற்சமயத்தில் மூன்று முறைகளைப் பயன்படுத்துவார்கள். 
தங்க ரேக்குதான் மூலப்பொருள். தங்கரேக்கு என்பது சுத்தமான தங்கத்தை மெல்லிய தகடாக அடித்துச்செய்யப்படுகிறது. தாளைவிட மெல்லியதாக இருக்கும். 
தங்கரேக்கை எடுத்து தனலில் வைத்து பழுக்கக் காய்ச்சுவார்கள். பின்னர் அதனை அப்படியே நல்லெண்ணெயில் முக்கி எடுப்பார்கள். 
இதுபோன்று ஏழு தடவைகள் செய்வார்கள். 
அதே மாதிரி, பழுக்கக்காய்ச்சி புளித்த மோரில் ஏழு முறை இட்டு எடுப்பார்கள். பின்னர் பசுவின் மூத்திரத்தில் அவ்வாறு செய்யப்படும். இறுதியாக கொள்ளு தானியத்தின் கொதிக்க வைத்த வடி தண்ணீரில் விட்டு எடுப்பார்கள். 
'ரச கர்ப்பூரம்' என்று ஒன்று இருக்கிறது. 'Mercuric Chloride' என்னும் ரசாயனப் பொருள் அது. நவபாஷாணத்தில் ஒன்றாகும். 
'நவ பாஷாணம் நவ பாஷாணம் என்று சொல்கிறார்களே, அது என்ன?' என்று கேட்கும் முன்னர் சொல்லிவிடுகிறேன். 
சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், தாரம், கெந்தி, ரஸகர்ப்பூரம், வெள்ளைப்பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டிப் பாஷாணம் ஆகியவை. 
ரஸகர்ப்பூரத்தை எலுமிச்சம் சாற்றுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்வார்கள். 
இதனை எடுத்துத் தங்க ரேக்கின் மீது அப்பிவிடுவார்கள். 
அடுத்தபடியாக மண்சிமிழில் கந்தகத்துடன் சேர்த்து வைத்து வாய்ச்சீலை யிட்டு மண்பூசி மூடிவிடுவார்கள். அது காய்ந்தவுடன் புடம் போடுவார்கள். 
எட்டு முறையாவது புடம் போடுவார்கள். எட்டு முறையும் ரசகர்ப்பூரத்தைச் சிறிது சேர்த்துக்கொள்வார்கள்.  பஸ்பத்தின் தன்மையைப் பொறுத்து இன்னும் அதிகமாகவும் புடம் போட நேரிடலாம். 
இன்னொரு முறையும் இருக்கிறது. 'மஞ்சள் கடம்பு' என்னும் தாவரம் ஒன்று இருக்கிறது. அதிலிருந்து ஒருவகையான உப்பு தயாரிப்பார்கள். ஒரு வகைக் கள்ளியின் பாலுடன் இதனைச் சேர்த்து கலவையொன்றைச் செய்வார்கள். இந்தக் கலவையுடன் தங்க ரேக்கைச் சேர்த்து அரைப்பார்கள். அதனைக் காயவைத்த பின்னர், 'கபில நிறம்' போன்ற வண்ணத்தைக் 
கொண்டதொரு பஸ்பம் கிடைக்கும்வரை இரு முறையோ அல்லது அதற்கும் மேலாகவோ அதனைப் புடம் போடுவார்கள். 


வேறொரு முறையில் தங்கரேக்கின் மீது எலுமிச்சஞ்சாற்றுடன் கலந்த ரச கர்ப்பூரத்தை அப்பிப் பழுக்கக் காய்ச்சி, அதனை முள்ளுக்கீரையின் பொடியுடன் கலந்து புடம் போடுவார்கள்.


இதனை சிறிய அளவில் உட்கொள்ளவேண்டும். 
அமுக்குராக் கிழங்கு, பூனைக்காலி, கஸ்தூரி ஆகியவற்றுடன் சேர்த்து அதனைச் சாப்பிடவேண்டும். அந்த மூன்றையும் 'அனுபானம்' என்று சொல்வார்கள். 
முதுமை ஏற்படமாட்டாது. தாது புஷ்டியைத் தோற்றுவிக்கும். பாலுணர்வை அதிகரிக்கும். வீரியத்தையும் ஏற்படுத்தும்.


மேலே கண்ட விபரத்தின் மூலம் முதல் மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்லியாகிவிட்டது. 
அடுத்து,  'இது விஷத்தன்மை படைத்ததா? '


விஷத்தன்மை படைத்தது என்று சொல்வதற்கில்லை. 
அதைத் தயாரிக்கும்போது ரச கர்ப்பூரம் சேர்கிறது. இது ஒரு விஷம். நவபாஷாணத்தைச் சேர்ந்தது. கந்தகம் போன்றவையும் வேறு சில மூலிகைகளும் சம்பந்தப்படுகின்றன. 
செய்முறையில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் 'ஹோகயா' - 'HOgayaa'- தானுங்களே? இல்லீங்களா?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$