Thursday 14 April 2011

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Part 5

இதை மாதத்தில் தைப்பூசத்தன்று தெப்பத்திருவிழாவை நடைபெறச் செய்தார் திருமலை நாயக்கர். 

But even this was not without strings.
அதுதான் திருமலை நாயக்கரின் பிறந்தநாள்.
அவர் அமைத்த தெப்பக்குளத்தை இப்போது 'வண்டியூர் தெப்பக்குளம்' என்று சொல்கிறோம். ஆனால் அதற்கு நாயக்கர் இட்ட பெயரோ,

'திருமலை நாயக்கர் சமுத்திரம்'.

மாசி மாதம் நடந்த தேர்த் திருவிழாவையும் சித்திரை மாதத்தின் வசந்த விழாவுக்குள் கொண்டுவந்துவிட்டார். 
அதே விழாவில் நடைபெற்ற மீனாட்சியம்மன் பட்டாபிஷேகத்தையும் நாயக்கமன்னர் செங்கோல் வாங்கும் வைபவத்தையும் சித்திரை விழாவுக்குள் சேர்த்துவிட்டார்.  அவர் செய்து விட்ட தேர்களோ மிகப் பெரிய தேர்கள். மிகப்பெரிய சிறந்த திருவிழாவாகவும் சித்திரைத் திருவிழா  நடைபெற வேண்டும். ஆள் சேரவேண்டுமே?  இதில் இருந்த பல பிரச்னைகளில் பெரும்பாலானவற்றைக் கடந்துவிட்ட திருமலை நாயக்கருக்கு ஒரு மிகப் பெரிய பிரச்னை எதிர்நோக்கியது.  சித்திரா பௌர்ணமிக்குத்தான் அழகர்கோயிலிலும் பெரிய திருவிழா நடைபெறும். மதுரைக்கு வடக்கிலும் மேற்கிலும் இருக்கும் பெருந்திரளான மக்கள்கூட்டம் அந்தத் திருவிழாவில் கலந்துகொள்ளும்.  அதெல்லாம் கள்ளர்நாடு.  அந்த விழாவின்போது அழகர்கோயிலிலிருந்து கள்ளழகர் உலா புறப்பட்டு, ஒவ்வொரு ஊராகச் சென்று மதுரைக்கு மேற்கே இருந்த தேனூர் வரைக்கும் வந்து செல்வது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமாக இருந்தது.  அந்தக் கூட்டத்தையெல்லாம் மதுரைவரைக்கும் இழுத்துச் சேர்த்துக் கொண்டார் நாயக்கர். 

எப்படி?

கள்ளழகரை மீனாட்சியம்மனின் திருக்கல்யாணத்துடன் சம்பந்தப்படுத்தி, அவரையும் சீர்வரிசை எடுத்துவரச் செய்து மதுரை வரை வந்து வைகை ஆற்றின் வழியாகப் பல மண்டபங்களில் திருக்கண் சாற்றிச்செல்ல ஏற்பாடு செய்தார். 
மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் எப்போதும் உள்ள வழக்கப்படி, மதுரையிலேயே கோயில்கொண்டுள்ள விஷ்ணுவாகிய கூடல் அழகரே நடத்திவைப்பது மரபு. அதனை நாயக்கர் மாற்றவில்லை.  கூடல் அழகரே நடத்திவைக்குமாறு செய்தார். கள்ளழகர் பல மண்டபங்களில் திருக்கண் சாற்றி, மக்களின் மரியாதையை ஏற்றுக்கொள்ளும் மரபை நீட்டிச் செய்வித்தல்மூலம் கள்ளழகர், திருக்கல்யாணத்தின்போது மதுரையின் வெளிப்புறத்திலேயே உலா வந்து கொண்டிருப்பார். 

திருமணம் நடந்துமுடிந்தவுடன் தேரோட்டம். கள்ளழகரோ மதுரையின் எல்லையில். ஆகவே கூட்டத்துக்குக் குறைச்சலில்லை.  கள்ளழகர் சித்திரா பௌர்ணமியன்று வைகையாற்றில் இறங்கி அதன்வழியே செல்வது ஒரு பிரம்மாண்டமான விழாவாகவும் உருப்பெற்றது.  அனுபவம் போதாத பேர்வழிகளைப் பற்றி வர்ணிக்கும்போது அந்தக் காலத்தில் மதுரை வட்டகையில் சொல்வார்கள்,"நீ ஆத்தக் கண்டியா...இல்ல, அளகர சேவிச்சியா? என்னத்தக் கண்டெ நீ?"  அப்படியென்றால் "Green-horn" அந்தஸ்த்தே உள்ளவன் என்று அர்த்தம்.

No comments:

Post a Comment