Thursday 28 April 2011

மஞ்சள், குங்குமம்

மஞ்சள்
ஸ்ரீதேவியின் வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்ற மங்கலகரமான பொருள்களில் மஞ்சளும் ஒன்று. மஞ்சளின் மங்கலத்தன்மையைப் பற்றி நிறைய எழுதலாம்.  முகத்தில் மஞ்சள் பூசுதல், மஞ்சள் துணியை அணிதல், மஞ்சள் நீரில் குளித்தல் முதலியவை மங்கலகரமான தெய்வீகத்தன்மை பொருந்திய காரியங்களாகப் பழைய நூல்கள் கருதுகின்றன. 
அம்பிகையின் வழிபாட்டில் மஞ்சள் முக்கியமானது. சுமங்கலிகளின் சுமங்கலத் தன்மையின் சின்னமாகவும் மஞ்சளே திகழ்கின்றது.

திருமணம் பரியும் போது மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோத்துப் பெண்ணின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போடுகின்றனர். அவசரக் கோலக் கல்யாணத்தில் மஞ்சள் கயிற்றில் வெறும் மஞ்சளைக் கோத்து அணிவிப்பதும் அங்கீகரிக்கப்பட்டதொரு வழக்கமாகும். ஏழ்மையில் உழலும் சுமங்கலிகள் மஞ்சள் கயிற்றில் மஞ்சளைத் தாலியாகப் பூண்டிருப்பதைக் காணலாம்.

ஒரு பெண் திருமணமானவள் என்பதற்கு அசைக்க முடியாத சான்று பகரும் அடையாளச் சின்னங்கள் மஞ்சள் கயிறும் மஞ்சளும்.

நெல்லைக் கையால் தேய்த்து உமி நீக்கப்பட்டு பிரித்தெடுக்கப்படும் அரிசியின் முனை உடைந்திருக்காது.  இப்படிப்பட்ட முனைமுறியாத அரிசியில் மஞ்சள் பொடியை நீரிட்டுப் பிசைந்து சேர்த்து செய்யப்படுவதே அட்சதை எனப்படுவது.  ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் தாங்கி வழங்கும் சாதனமாக அட்சதை விளங்குகிறது.  பூஜையின்போது மலர்கள் இல்லாமல் போனால் மலர்களுக்குப் பதில் அட்சதையை வைத்தும் பூஜையைச் செய்வதுண்டு.

மஞ்சளைக் காப்பாக மணிக்கட்டில் அணிந்து கொள்வது சில நிகழ்ச்சிகளில் காணப்படும். இதுதான் மஞ்சள் காப்பு எனப்படும்.  இப்போதெல்லாம் மஞ்சள்கிழங்கைக் கட்டாமல் வெறும் மஞ்சள் நூல் அல்லது கயிறைக் கட்டுகிறார்கள்.  

மங்கலகரமான நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ், புதுக்கணக்கின் ஏடு முதலியவைகளில் மஞ்சள் தடவுகிறோம்.  மஞ்சள் பொடியில் தண்ணீர் கலந்து பிள்ளையார் பிடித்து அர்ச்சனை செய்கிறோம்.  வழிபாட்டில் பயன்படுத்தப்படும் மஞ்சளால் ஆன தற்காலிகமான உருவங்களை ஹரித்ரா பிம்பம் என்பார்கள். மஞ்சளாம் பிடித்துவைத்த பிள்ளையாரும் இந்த வகைதான்.

ஸ்ரீதேவியின் அடையாளமாக வலது பக்கமாகச் சுழன்றிருக்கும் ஸ்வஸ்திகா சின்னத்தை வரைந்து வழிபாட்டில் பயன்படுத்துவது உண்டு.  மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி ஆகியோர் அணிந்திருக்கும் ஆடையை பீதாம்பரம் என்பார்கள். 

ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்துக்கு சில தியான சுலோகங்கள் இருக்கின்றன.  ஒரு ஜபத்துக்கு முன்னர் ஜபத்துக்குரிய தெய்வத்தை மனதில் ஆவாஹணம் செய்துகொள்ளவேண்டும். ஆவாஹணம் என்றால் மனதிற்குள்ளே எழுந்தருளப் பண்ணிக்கொள்ள வேண்டும். அந்த ஆவாஹணத்துக்கு உதவி செய்யக்கூடியது தியான சுலோகம். சுலோகத்தில் சொல்லப்பட்டிருக்கிற உருவத்தை மனத்திரையில் உருவகப்படுத்தி ஏற்றிவைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு இது உதவும்.  ஸ்ரீலலிதாவுக்கு உரிய தியான சுலோகங்களில் ஒன்று இப்படி வரும்:

த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸிதவதனாம் 
பத்மபத்ராயதாக்ஷ£ம் 
ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலித ஹேமபத்மாம் வராங்கீம்....

பீதவஸ்த்ரம் என்பது பீதாம்பரம்தான். பீதாம்பரம் என்பது பொன்னால் ஆன ஆடை அல்லது பொன்னிற ஆடையைக் குறிக்கும். அல்லது மஞ்சள் நிற ஆடையையும் குறிக்கும்.  மந்திர சாஸ்திரத்திலும் மஞ்சள் நிறையப் பயன்படுத்தப்படுகிறது. 

அடுத்தாற்போல் சில அபூர்வமான விஷயங்கள்.......

குங்குமம்
மஞ்சளில் பல வகையுண்டு. விரலி மஞ்சள், சருகு மஞ்சள், பூச்சு மஞ்சள், கறி மஞ்சள், கஸ்தூ¡¢ மஞ்சள், நாட்டு மஞ்சள், சீமை மஞ்சள், குரங்கு மஞ்சள் என்பவை அவற்றுள் சில. மஞ்சள் நிறமுடையவை பெரும்பாலும் மங்கலகரமானவையாகக் கருதப்பட்டாலும் சில மஞ்சள் சமாச்சாரங்களுக்குப் பயப்பட வேண்டித்தான் இருக்கிறது. மஞ்சள் காமாலை, மஞ்சள் கடுதாசி, மஞ்சள் பத்திரிக்கை முதலியவற்றைக் கூறினேன்.

மஞ்சள் பொடியில் அர்ச்சனை செய்வதும் உண்டு.  ஹரித்ரா சூர்ணம் என்பதே மஞ்சள் பொடி. மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படுவதை ஹரித்ரா குங்குமம் என்று கூறுகின்றோம்.    உண்மையிலேயே குங்குமம் என்பது ஆரம்பகாலத்தில் குங்குமப்பூவைக் குறித்தது.    குங்குமப்பூ என்பது ஒரு தனிப் பொருள். இதைக் கடைகளில் வாங்கலாம். மெல்லிய இழைகளாக - குங்கும வர்ணத்தில் கிடைக்கு. மெல்லிய-ஆனால் நீண்ட தூரம் பரவும் நறுமணம் உடையது. இது ஒருவகைச் செடியின் மலரின் காயவைக்கப்பட்ட மகரந்தக் காம்புகள். காஷ்மீர், துருக்கி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் கிடைக்கும். 

"குங்குமப்பூவே! கொஞ்சும் புறாவே!" என்று பாடல் சிறப்புப் பெற்ற குங்குமப்பூ இதுதான்.
மிகவும் கிராக்கியான பொருள். 
ஆகவே  அதிகக் கலப்படத்துக்கு ஆளாகிறது. 
தேங்காய்ப்பூவின் கலரைச் சேர்த்து குங்கும எஸென்ஸைச் சேர்த்து அதைக் குங்குமப்பூ என்று விற்பார்கள்.
'எடைக்கு எடைத் தங்கம்' என்பார்கள். அது குங்குமப்பூவுக்குப் பொருந்தும். 

குங்குமப்பூவைப் பச்சைக் கற்பூரம் சேர்த்துப் பன்னீருடன் உரசுகல்லில் உரசி எடுப்பார்கள். இதுதான் குங்குமப்பூச்சு; அல்லது குங்குமக்குழம்பு.    இதைத்தான் அம்பிகைக்குத் திலகமாக இட்டு, பூச்சாகவும் பூசுவது.  பழங்காலத்தில் வசதி மிக்க அரச வர்க்கத்துப் பெண்கள், பணக்காரப் பெண்கள் முதலியோர் குங்குமப் பூச்சு, குழம்பு ஆகியவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தினார்கள். 

குங்குமம் என்ற பெயரில் நாம் பயன்படுத்தும் 'ஹரித்ரா குங்குமம்' என்பது குண்டு மஞ்சள், எலுமிச்சைச் சாறு, சீனாக்காரம், படிக்காரம், நல்லெண்ணெய் முதலியவற்றிலிருந்து செய்யப்படும்.    வைணவர்கள் ஸ்ரீசூர்ணம் என்னும் பொடியை நாமமாக அணிந்து கொள்கிறார்கள்.

துவந்த யுத்தம்

துவந்த யுத்தம் என்பது இருவருக்கு இடையே மட்டும் நடக்கும் போர். இதனை Duel என்று அழைப்பார்கள்.  இதைப் பற்றி 'துவந்த யுத்தம்' என்னும் இழையொன்றை முன்பு எழுதியிருந்தேன். அதில் துரியோதனன் vs பீமன், வாலி vs சுக்ரீவன் முதலியவர்களுக்கு இடையே நடந்த துவந்த யுத்தத்தைப் பற்றியும் எழுதி, அந்த சம்பவங்களைக் குறிக்கும் சிற்பங்களின் படங்களையும் ஸ்கேன் செய்து போட்டிருந்தேன். ஜாவா, காம்போடியா ஆகிய இடங்களில் காணப்படும்
சிற்பங்கள் அவை.

அதற்கும் முன்னால் Throwing the Gauntlet என்னும் இழையில் இதே மாதிரியான விஷயங்களைப் பற்றி பேசியிருந்தோம்.  துவந்த யுத்தம் சம்பந்தமாக இன்னொரு சம்பவமும் நினவுக்கு வந்தது. வேடிக்கையான சம்பவம்தான்.

ருடால்·ப் விர்ச்சாவ் Rudolf Virchow என்பவர் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரஷ்யா நாட்டில் வாழ்ந்த மருத்துவ விஞ்ஞானி. அவர் Pathology, Bacteriology ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். பெரிய ஆராய்ச்சியாளர். மருத்துவத்துறையில் பல கண்டு பிடிப்புகளைச் செய்திருக்கிறார். சிலவகை கேன்சர்களில் கழுத்து, தோள்பட்டை குறுக்கெலும்புவுக்கு மேலே தோன்றக்கூடிய கழலைக் கட்டிக்கு Virchow's Gland என்று இவருடைய பெயரையே கொடுத்திருக்கின்றனர்.

இவர் தமக்கென்று கருத்துக்களை வைத்திருந்தவர்.  யாருக்காகவும் விட்டுக்கொடுத்துவிடமாட்டார்.  மகாகண்டனவாதி என்று பெயர் பெற்றவர்.  பிரஷ்ய அரசங்கத்தின் சுகாதாரப் பிரிவை அடிக்கடி கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்.

ஆகவே அவருக்கு ஏராளமான பெரிய இடத்து விரோதிகள் இருந்தனர்.

ஒருமுறை ஒரு ராணுவ ஆசாமியுடன் தகராறு ஏற்பட்டுவிட்டது. அந்த ஆள் ஒரு உயர் அதிகாரி.  பிரஷ்யாவின் ராணுவம் ஒரு தினுசானது.  அதில் அதிகாரியாக இருந்தவர்கள் எல்லாருமே பிரபுத்துவ மரபைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

அதுவும் சம்பந்தப்பட்ட அதிகாரி Fencing Master - வாள் வித்தையில் நிபுணன்.  குறி தவறாமல் இரண்டு கைகளாலும் துப்பாக்கியால் சுடக்கூடியவன்.  அப்பேற்பட்ட ஆளுடன் தகராறு.

அந்தக் கால மரபுப்படி விர்ச்சாவை அவன் துவந்த யுத்தத்துக்கு அழைத்தான்.  அவருடைய வயது, கல்வி, ஆயுதப் பயிற்சியின்மை ஆகியவற்றை நடுவர்களும் நண்பர்களும் சுட்டிக் காட்டிய பின்னர் விர்ச்சாவே தமக்கு உகந்த இஷ்டப்பட்ட ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு விட்டுக்கொடுத்தான்.  அடுத்த நாள் நடுப்பகல் பன்னிரண்டு மணிக்கு துவந்தயுத்தம்.  பிரஷ்யாவின் முக்கிய அதிகாரிகள், கல்வியாளர்கள், அரச குடும்பத்தினர், பிரபுக்கள் எல்லாரும் பெருங்கூட்டமாகக் கூடினர்.  துவந்த யுத்தம் நடைபெறவேண்டிய மைதானத்தின் மத்தியில் ஒரு டேபில் போடப் பட்டிருந்தது.  போட்டியாளர்கள் இருவரும் அந்த டேபிலுக்குச் சென்றனர்.

அதில் ஒரு தட்டு. மூடப்பட்டிருந்தது.

விர்ச்சாவ் அந்த மூடியைத் திறந்தார்.

அதில் இரண்டு சாஸேஜ் தின்பண்டங்கள் இருந்தன.  ஸாஸேஜ் என்பது பன்றிக் குடலுக்குள் பொடிமாஸ் கீமா செய்யப்பட்ட பன்றிக்கறி திணிக்கப்பட்டு, குடலின் நுனிகள் முடிச்சுப் போடப்பட்டிருக்கும். ஸாஸேஜை சுட்டோ, வறுத்தோ, பொரித்தோ சாப்பிடுவார்கள்.
அந்த ஸாஸேஜ் தட்டை எடுத்து அதிகாரியிடம் நீட்டி விர்ச்சாவ் சொன்னார்:
"இந்த இரண்டு ஸாஸேஜ்களில் ஒன்று சாதாரணமானது. இன்னொன்றில் பயங்கரமான காலரா கிருமிகள் செலுத்தப் பட்டிருக்கின்றன. அதைச் சாப்பிடுபவர் நிச்சயமாக இறந்து விடுவார். இதைவிட பயங்கரமான ஆயுதத்தை என்னால் கற்பனை செய்யமுடியவில்லை.  ஆகவே ஒரு ஸாஸேஜை எடுத்துக்கொள்ளும். May the best man live", என்றார்.

அந்த அதிகாரி போட்டியிலிருந்து வாபஸ் வாங்கிக் கொண்டான்.

விர்ச்சாவ் தமது எண்பத்தோராவது வயதில் இருபதாம் நூற்றாண்டு பிறப்பதைப் பார்த்துவிட்டு 1902-ஆம் ஆண்டு நிம்மதியாகக் காலமானார்.

Russian Roullette என்றொரு பந்தயம் இருக்கிறது.

இந்தச் சொல்லை நம்ம ஆட்கள் ரஷ்யன் ரௌலெட் என்பார்கள். அவர்கள் இந்திய வரலாற்றைப் பள்ளியில் படித்திருப்பார்கள். இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுப்பதில் அழிசாட்டியம் செய்துகொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியர்கள் ஒரு சமயத்தில் ரௌலட் சட்டம் என்பதைப் போட்டனர். அந்த ஞாபகத்தில் இதையும் அப்படிச் சொல்வார்கள்.  சட்டம் போட்ட ஆசாமியின் பெயர் Sydney Rowlatt.  இது வேறு. ·பிரெஞ்சுச் சொல். ரூலே என்பது உச்சரிப்பு.

·பிரெஞ்சுக்காரர்கள் சூதாடுவதை ஒரு கலையாக வைத்திருப்பவர்கள். ரூலே என்பது ஒருவகை சூதாட்டம்.  அதில் ஒருவகைதான் ரஷ்யன் ரூலே.  அந்தக் காலத்தில் ரிவால்வர் என்றொருவகைக் கைத்துப்பாக்கி புழக்கத்தில் இருந்தது. அதில் Revolving Chamber என்னும் சங்கதி இருக்கும். அதில்தான் குண்டுகள் நிரப்பப் பட்டிருக்கும்.  ரஷ்யன் ரூலேயில் ஒரு ரிவால்வரின் சேம்பரில் இருக்கும் ஒரே ஒரு ஸ்லாட்டில்மட்டும் குண்டைத் திணித்துவிட்டு அதைச் சுழற்றிவிட்டு பந்தயத்தில் பங்கு பெறுபவர்களிடம் கொடுப்பார்கள்.  அதைத் தன் நெற்றிப்பொட்டில் வைத்து பிஸ்டல் குதிரையை அழுத்தவேண்டும்.

குண்டு வெடித்தால் ஹோகயா. வெடிக்கவில்லையென்றால் சூதாட்டத்தில் ஜெயித்ததாக அர்த்தம்.

இதையே துவந்த யுத்தத்திலும் பயன்படுத்திக்கொண்டார்கள்.  இரண்டு துப்பாக்கிகளை ஒரு தாம்பாளத்தில் வைத்து, போட்டியாளர்களிடம் கொடுப்பார்கள்.  அதில் ஒரு துப்பாக்கியில் மட்டும் குண்டு இருக்கும்.  இன்னொன்று காலி.  ஆனால் எந்தத் துப்பாக்கியில் குண்டு இருக்கிறது என்பது போட்டியாளர்களுக்குத் தெரியமாட்டாது.  ஆளுக்கொரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, சற்று தூரத்துக்குச் சென்று துப்பாக்கியைக் குறிவைத்துக் குதிரையை அழுத்துவார்கள். குண்டு இருக்கும் பிஸ்டல் வெடிக்கும். குறியும் தப்பவில்லையென்றால் எதிரி காலி.

இதே அடிப்படையில்தான் வர்ச்சா·ப் தம்முடைய ஸாஸேஜ் போட்டியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

Saturday 23 April 2011

An Old Man, A Walking Stick, and Two Lions


புலியை முறத்தால் அடித்துத் துரத்திய மறத்தி ஒருத்தியைப் பற்றியும் படகுத் துடுப்பால் அடித்து விரட்டிய வீர வங்க வனிதையைப் பற்றியும் எழுதியிருந்தேன்.  இப்போது இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன்.


ஆ·ப்ரிக்காவில் நடந்தது. 

முதுமையும் நோயால் தளர்ந்து போன உடலும் கொண்ட வெள்ளைக்காரக் கிழவரும் கைத்தடியும்.

 பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஒரு டாக்டர் இருந்தார்.   பெயர் டேவிட் லிவிங்ஸ்டன்.  அவர் சமயத்தொண்டு ஆற்றவேண்டும் என்று எண்ணியதால் ஒரு மிஷனரியாக ஆவதற்கு சங்கல்பம் எடுத்துக்கொண்டு, ஆப்·ரிக்காவின் காடுகளுக்குள் சென்று விட்டார்.  ஆ·ப்ரிக்கக் காடுகளின் மத்தியப் பகுதிக்குள் - நடுக்காட்டுக்குள் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்றவேண்டும் என்பது அவரது நோக்கம். அத்துடன் நைல் நதி எங்கு உற்பத்தி ஆகிறது என்பதையும் கண்டறியவேண்டும் என்று எண்ணி யிருந்தார்.   அவர் காட்டுக்குள் மறைந்தது மறைந்ததேதான்.

ரொம்பநாட்கள் ஆகிவிட்டன.   அவர் என்ன ஆனார் என்பதே தெரியாமலிருந்தது.  இங்கிலாந்தில் அவரைத் தேடிச் செல்ல யாரையாவது அனுப்பவேண்டும் என்று முடிவாயிற்று.  ஹென்ரி ஸ்டான்லி என்பவர் ஒரு பத்திரிக்கையாளர். நியூயார்க் ஹெரால்ட்  பத்திரிக்கையில் விசேஷ நிருபராக இருந்தார்.    லிவிங்ஸ்டனைத் தேடுவதற்கு ஸ்டான்லியை நியூயார்க் ஹெரால்ட் பத்திரிக்கை அனுப்பியது. 

அவர் தற்கால தான்ஸேனியா நாட்டுக்குச் சென்று அங்கிருந்து தங்கன்யீக்கா ஏரியை நோக்கிச் சென்றார். காட்டுக்குள்தான்.   ஏனெனில் அந்த வட்டாரத்தில்தான் லிவிங்ஸ்டன் கடைசியாகக் காணப்பட்டதாகத் தகவல்.    அங்கிருந்து அப்படியே காங்கோ காடுகளுக்குள் நுழைந்துவிட்டார்.  ஆங்காங்கிருந்த காட்டுவாசிகளிடம் விசாரித்துக்கொண்டே  சென்றார்.    கடைசியில் ஒரு சிறிய குக்கிராமத்தில் ஒரு குடிசையில் லிவிங்ஸ்டன் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. 

அந்த குக்கிராமத்துக்குச் சென்றார்.

குடிசைக்கு அருகில் ஸ்டான்லி வந்ததும் லிவிங்ஸ்டன் வெளியில் வந்தார்.

அவரைப் பார்த்ததும் ஸ்டான்லி தன் வலக்கையை நீட்டி, "டாக்டர் லிவிலிங்ஸ்டன் என்று நினைக்கிறேன்?"(Dr. Livingstone, I  presume?") 

அவருடைய கையைப் பிடித்தவாறு லிவிங்ஸ்டன் சொன்னார், "ஆம், ஆம்.  நீங்கள் வந்தது குறித்து கடவுளுக்கு நன்றி" (Yes. Yes. Thank God you have come")

மிகவும் நோயால் நலிவுற்றிருந்தார். சரியான ஆகாரமும் கிடையாது. 

போதாததற்கு ஒரு சிங்கம் அவரைத் தாக்கித் தோள்பட்டையைக் கௌவியதில் அவருடைய ஒரு கை செயலற்றுத் தொங்கிப்போயிருந்தது.

கொஞ்ச காலம் லிவிங்ஸ்டனுடன் ஸ்டான்லி இருந்தார். 

இருவரும் ஒரு நாள் ஓரிடத்தில் காற்று வாங்கியவாறு அமர்ந்திருந்தபோது இரண்டு மூன்று சிங்கங்கள் அங்கு வந்து விட்டன.  அவை மிகவும் அருகில் வந்து இவர்களின்மீது பாயப்போகும்போது லிவிங்ஸ்டன் தன் கையில் இருந்த வாக்கிங் ஸ்டிக்கை ஒரே கையால் ஓங்கிச் சுழற்றியவாறு பெரும் கூச்சலிட்டுக் கொண்டு சிங்கங்களை நோக்கி ஓடினார்.  அந்த சிங்கங்கள் நிதானித்தன.    பின்னர் எல்லாமே தலை தெரிக்க ஓடிவிட்டன. 

அவை எதிர்பார்த்திருக்க முடியாதல்லவா. தன்னுடைய இயற்கையான உணவுப்பொருள் தன்னையே எதிர்த்து விரட்டுகிறதே.  அவற்றிற்குப் பெரும் குழப்பம்.  அதன் பின் பயம்.

அதான் ஓடிவிட்டன. 

A Woman, A MuRam, and A Tiger

சிலநாட்களுக்கு முன்னர் பயம் என்னும் தலைப்பில் எழுதிக்கொண்டிருந்தேன்.  அப்போது புலியைப் பார்த்த மாத்திரத்தில் ஏற்படும் கிலியைப் பற்றியும் Panic Seizure, Panic Paralysis என்பனவற்றைப் பற்றியும் எழுதியிருந்தேன். 'புலி அடித்ததோ, கிலி அடித்ததோ' என்னும் முதுமொழியைப் பற்றியும் சொல்லியிருந்தேன்.   பல சமயங்களில் அந்த பயத்தையும் ஒழித்துவிட்டு தைரியத்துடன் செயல் பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். 

ரொம்ப நாட்களுக்கு முன்னர் 'சொர்க்கவாசல்' என்னும் படம் வந்தது. அந்தப் படத்தின் கதை வசனத்தை எழுதியவர் பேரறிஞர் அண்ணா. அதன் ஹீரோவாக நடித்திருந்தவர் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி. நன்றாகப் பாடுவார். பல எழுச்சி மிக்க, தமிழ் உணர்வையும் பற்றையும் தூண்டக்கூடிய பாடல்களைப் பாடியிருக்கிரார்.  அந்தப் படத்தில் ஒரு மெல்லிசைப் பாடல் வரும்.  'கன்னித் தமிழ்ச்சாலையோரம் போகையிலே கவிதைக் கனிகளுண்டு......(ஏதோ வரும். ஞாபகம் இல்லை) அந்தப் பாட்டிலே ஓரிடத்தில்.....

"சீறி வந்த புலியதனை முறத்தினாலே - அடித்து 
சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாளே!"

என்ற அடிகள் வரும். 

சில பெண்கள் ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பெண், முறத்தை வைத்துக்கொண்டு ஏதோ செய்துகொண்டிருந்தாள்.  அப்போது ஒரு புலி அவர்களைப் பிடிப்பதற்காக சீறிக்கொண்டு பாய்ந்து வந்தது.  மற்றவர்கள் பயந்திருப்பார்கள். அவர்களில் அந்த முறத்துக்காரப் பெண் மட்டும் சற்றும் பயமே இல்லாமல் கையில் இருந்த முறத்தைக் கொண்டு அந்தப் புலியைத் தாக்கினாள். சங்க காலத்துத் தமிழச்சிகளில் இப்படிப்பட்ட தைரியசாலிகள் இருந்தனர் என்று முன்பெல்லாம் மேடைப்பேச்சாளர்கள் கூறுவது உண்டு.  இப்போதும் இருக்கின்றனர்.  எப்போதும் இருந்தனர்.  எங்கும் இருந்தனர்/இருக்கின்றனர். 

வங்காள தேசத்தில் ஓரிடத்தில் வேங்கைப் புலிகள் அதிகம்.  அங்கு நஸ்மா அக்டெர் என்னும் பெண்ணும் அவளுடைய கணவனும் ஒரு கால்வாயில் இரால் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.  அப்போது ஒரு வேங்கைப் புலி, கணவனின்மீது பாய்ந்து, முழங்காலைக் கௌவி, அவனைக் காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்றது.  இதைக் கண்ட அக்டெர், அருகில் உள்ள படகில் கிடந்த துடுப்பை எடுத்து அந்த வேங்கையை அடித்தாள். தொடர்ச்சியாக அடித்துக்கொண்டேயிருந்தாள்.  இவ்வாறு பத்து நிமிடங்கள் அடி கொடுத்து, அந்தப் புலியைத் தடுத்து நிறுத்திவிட்டாள். வேங்கை அதன் பிடியை விட்டுவிட்டது.  கடுமையாக அடி வாங்கிய வேங்கைப் புலி தப்பித்து, காட்டுக்குள் ஓடிவிட்டது.  கணவனுக்குச் சிறிய காயங்களே ஏற்பட்டன.  அக்டெருக்கு வயது பதினெட்டேதான். 

வங்கத்தில் ஒரு கேஅர் ஆர் இருந்திருந்தால் பாடியிருப்பார்...

"சீறிவந்த புலியதனைத் துடுப்பினாலே அடித்து 
சிங்கார வங்க வனிதைத் துரத்தினாளே....."

Thursday 14 April 2011

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Epilogue

திருப்பரங்குன்றத்து முருகன் சம்பந்தம்:

திருப்பரங்குன்றம் முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் ஒன்று. கடைச்சங்க காலத்திலேயே அது அவ்வாறு சிறப்புப் பெற்றுவிட்டது.  திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் முதலாவதாக வைத்துப் பாடப்படுவது அதுதான்.  பழங்குறிப்புகளிலிருந்து முருகனுடைய வழிபாட்டுத்தலம், திருப்பரங்குன்றத்தின் வடபுறச்சரிவில் அடிவாரத்தில் இருந்திருக்கிறது.  கடைச்சங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகள் சமயத்தில் திருப்பரங்குன்றத்தின் தென் பக்கச் சரிவில் குடைவரைக் கோயில்களை இடைக்காலப் பாண்டியர்கள் கட்டினர்.

குடைவரைக் கோயில் என்றால் பாறையை அப்படியே குடைந்து அதில் சிற்ப வேலைப்பாடுகள், தூண்கள் ஆகியவற்றையும் செதுக்கி நிறுவி அமைக்கப்படும் கோயில்.  மேலும் கீழுமாக இரண்டு குடைவரைக் கோயில்கள். இப்போது கண்ணுக்குத் தெரிவது ஒன்றுதான். மேலேயுள்ளது.
கீழேயுள்ளது.....
கீழேதான் இருக்கிறது. பார்க்கமுடியாது. ஆகவே இருப்பதுவும்கூட வெளிப்படத் தெரியாது. எல்லாம் அவளுக்கே வெளிச்சம்.  அவற்றில், மேலேயுள்ள குடவரைக் கோயில் ஐந்து கருவறைகளைக் கொண்டிருந்தது. சிவன்,விஷ்ணு, துர்க்கை போன்ற தெய்வங்களுக்கு அவை உரியவையாயிருந்தன.  அந்த தெய்வங்களின் புடைப்புச் சிற்பங்கள் அந்த கருவறைகளில் திகழ்ந்தன.  ஆனால் அவற்றுள் முருகனுக்குரிய கருவறை இல்லாமலிருந்தது.  ஏனெனில் முருகனின் சன்னிதி அங்கேயில்லை.  திருமலை நாயக்கர் செய்த திருப்பணிகளில் திருப்பரங்குன்றக் கோயிலும் ஒன்று. அவர் அக்கோயிலைப் பெரிதாக எடுத்துக்கட்டி, அழகு படுத்தினார். மேலேயுள்ள ஐந்து தெய்வங்களுடன் முருகனுக்கும் ஒரு  சன்னிதியை ஏற்படுத்திவைத்தார். அதில் முருகனுக்கும் சிலை எடுப்பித்தார். ஆனால் அது புடைப்புச் சிற்பமல்ல. 
இவ்வளையும் செய்துவிட்டு அந்த சன்னிதியில் ஒரு நல்ல இடத்தில், நல்ல தூணில், பார்க்கக்கூடிய உயரத்தில், பட்டமகிஷிகள் புடைசூழ, தன்னுடைய உருவச்சிலையையும் வைக்கச்செய்தார்.  மலையின் வடபுறத்தில் இருந்த முருகத்தலம் என்னவாயிற்று என்பது தெரியவில்லை. ஆனால் அன்றிலிருந்து தென்புறத்திலிருந்த ஐந்து தெய்வங்களின் கூட்டுக்கோயில்தான் அதிகாரபூர்வமாக திருப்பரங்குன்றது முருகன் கோயிலாக மாறிவிட்டது.

மதுரை வட்டாரத்தில் ஒரு சொல்வழக்கு உண்டு.  "திருமலை நாயக்கன் திருப்பரங்குன்றத்தைத் திருப்பி வச்சான்."  வடபுறத்து வழிபாட்டுத்தலம் தென்புறத்துக்கு வந்துவிட்டதல்லவா?  இங்கிருந்து முருகனை மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவில் கலந்துகொள்ளுமாறு எழுந்தருளச்செய்துவிட்டார்.  ஏற்கனவே மதுரையில் இருந்த கூடல் முருகன், சோமாஸ்கந்தர் சம்பிரதாயத்துடன் இது கலந்துவிட்டது. அப்படித்தான் திருப்பரங்குன்றது சுப்பிரமணியர், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் கலந்துகொள்ளும் மரபு நிறுவப்பட்டது.  வந்தவர் சும்மாவா வருவார்? அந்த வட்டாரத்து மக்கள் கூட்டத்தை யெல்லாம் அவர் பங்குக்குக் கூட்டிவந்தார். 

இதையெல்லாம் நாயக்கர் எப்படிச்செய்தார்?

'The Good, the Bad, and the Ugly' என்ற படத்தின் கடைசிக்காட்சியில் Clint Eastwood துப்பாக்கியை நீட்டியவாறு Eli Wallach இடம் சொல்வார்......

"In this world, there are two kinda people. 
Them that carry guns; and them that dig. 
You dig".

நாயக்கரிடத்திலும் துப்பாக்கி இருந்தது. பணமும் இருந்தது.  இரண்டையும் செலுத்த அதிகாரமும் இருந்தது. மூன்றையும் சேர்த்து பிரயோகிக்க ஆள்பலமும் இருந்தது. அதற்கு மேல் குயுக்தியும் இருந்தது.  அதற்கும் மேலாக தைரியம் இருந்தது
எல்லாவற்றையும்விட தன்னம்பிக்கை இஇருந்தது.

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Part 6

திருமலை நாயக்கரால் சித்திரை மாதவசந்த விழா, பெரும் பரிமாணங்களைப் பெற்றது. தைமாதத்தின் மீனாட்சி திருக்கல்யாணம், மாசி மாதத்தின் "நாயக்கர் செங்கோல் வாங்கும் வைபவம்", மாசித் தேரோட்டம், பங்குனித் தேரோட்டம், ஆகியவைகளைத் தனக்குள் அடக்கிக்கொண்டு, கள்ளழகர் சித்திரா பௌர்ணமி உற்சவத்தையும் இழுத்து வைத்துக்கொண்டு, பெருவிழாவாக மாறியது.

சித்திரத் திருவிழா பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படுவதாயிற்று.  இன்றும்தான். இந்தத் திருவிழாவின்போது மீனாட்சி பட்டாபிஷேகம் அம்மன் சன்னிதியின் ஆறுகால் பீடத்தில் நடைபெறும். அப்போது நாயக்கர், அம்மனிடம் செங்கோல் வாங்கும் விழாவும் நடைபெறும். திருமலை நாயக்கர் அந்த விழாவை ஏற்படுத்திய காலத்தில் அது மிகப் பெரிய அளவில் நடந்தது.  இதைப் பற்றி "ஸ்ரீதளப் புஸ்தகம்" என்னும் பழைய ஆவணச்சுவடியில் விலாவாரியாக எழுதியிருக்கிறார்கள். பழைய காலத் தமிழ்நடை. அதனைச் சுருக்கி எழுதியுள்ளேன்.

மதுரை நாட்டின் எழுபத்திரண்டு பாளையக்காரர்கள் -  கட்டபொம்மனைத் தவிர - அனைவரும் வந்திருப்பார்கள்.  ஒவ்வொருவரும் அவரவருக்குரிய பட்டாளம் பரிவாரம் புடைசூழ அவரவர் கொண்டுவந்த தாரை தப்பட்டை, பதினெட்டு வாத்தியங்கள் முழங்க, வரிசையாக திருமலைநாயக்கர் மஹாலிலிருந்து புறப்படுவார்கள்.  பின்னால் யானைமீது நாயக்கர் வருவார். இப்படி பயங்கரமாகக் கொட்டி முழக்கிக்கொண்டு எழுபத்திரண்டு செட்டுகளுடனும் நாயக்கர்  கோயிலுக்கு வந்து சேர்வார்.

அம்மன் சன்னிதியின் ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனை ரத்தின சிம்மாசனத்தில் எழுந்தருளுவித்திருப்பார்கள்.  நாயக்கர் கோயிலுக்குள் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்வார். சுவாமிக்குச் சாத்தியிருக்கும் மாலையை நாயக்கருக்கு சமர்ப்பிப்பார்கள்; பரிவட்டங்கள் கட்டுவார்கள். செங்கோலை எடுத்து நாயக்கர் கையில் கொடுப்பார்கள்.  அதை வாங்கிக்கொண்டு, நாயக்கர் மீண்டும் தன்னுடைய பெரும் பரிவாரங்களுடன் "பட்டணப்பிரவேசம்" என்ற ஊர்வலம் வருவார். அப்போது மீனாட்சி சுந்தரேசுவரருடன் கோயிலில் உள்ள 'இளைய பிள்ளையார்' எனப்படும் முருகனையும் ஊர்வலமாகக் கொண்டு வருவார்கள்.

சிவன் கோயிலில் உள்ள உற்சவ மூர்த்தியை 'சோமாஸ்கந்த மூர்த்தம்' என்று சொல்வார்கள். சிவனும் உமையும் அமர்ந்திருக்க இருவரின் நடுவிலும் சிறிதான உருவில் முருகனின் திருவுரு விளங்கும்.  'ச' = உடன்; ச + உமா + ஸ்கந்த = சோமாஸ்கந்தமூர்த்தி =  உமை கந்தனுடன் உள்ள மூர்த்தி.  இந்த மூர்த்தமே விழாக்களில் சம்பந்தப்படுவது. முருகனும் உடன் இருப்பது ஆகம மரபு.

அதுமட்டுமல்ல. மீனாட்சி திருக்கல்யாணத்தில் 'பவளக் கனிவாய்ப் பெருமாள்' என்னும் விஷ்ணுவும் விநாயகரும்கூட இருப்பார்கள்.  அடுத்து திருப்பரங்குன்றத்து முருகனின்சம்பந்தம்.....

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Part 5

இதை மாதத்தில் தைப்பூசத்தன்று தெப்பத்திருவிழாவை நடைபெறச் செய்தார் திருமலை நாயக்கர். 

But even this was not without strings.
அதுதான் திருமலை நாயக்கரின் பிறந்தநாள்.
அவர் அமைத்த தெப்பக்குளத்தை இப்போது 'வண்டியூர் தெப்பக்குளம்' என்று சொல்கிறோம். ஆனால் அதற்கு நாயக்கர் இட்ட பெயரோ,

'திருமலை நாயக்கர் சமுத்திரம்'.

மாசி மாதம் நடந்த தேர்த் திருவிழாவையும் சித்திரை மாதத்தின் வசந்த விழாவுக்குள் கொண்டுவந்துவிட்டார். 
அதே விழாவில் நடைபெற்ற மீனாட்சியம்மன் பட்டாபிஷேகத்தையும் நாயக்கமன்னர் செங்கோல் வாங்கும் வைபவத்தையும் சித்திரை விழாவுக்குள் சேர்த்துவிட்டார்.  அவர் செய்து விட்ட தேர்களோ மிகப் பெரிய தேர்கள். மிகப்பெரிய சிறந்த திருவிழாவாகவும் சித்திரைத் திருவிழா  நடைபெற வேண்டும். ஆள் சேரவேண்டுமே?  இதில் இருந்த பல பிரச்னைகளில் பெரும்பாலானவற்றைக் கடந்துவிட்ட திருமலை நாயக்கருக்கு ஒரு மிகப் பெரிய பிரச்னை எதிர்நோக்கியது.  சித்திரா பௌர்ணமிக்குத்தான் அழகர்கோயிலிலும் பெரிய திருவிழா நடைபெறும். மதுரைக்கு வடக்கிலும் மேற்கிலும் இருக்கும் பெருந்திரளான மக்கள்கூட்டம் அந்தத் திருவிழாவில் கலந்துகொள்ளும்.  அதெல்லாம் கள்ளர்நாடு.  அந்த விழாவின்போது அழகர்கோயிலிலிருந்து கள்ளழகர் உலா புறப்பட்டு, ஒவ்வொரு ஊராகச் சென்று மதுரைக்கு மேற்கே இருந்த தேனூர் வரைக்கும் வந்து செல்வது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமாக இருந்தது.  அந்தக் கூட்டத்தையெல்லாம் மதுரைவரைக்கும் இழுத்துச் சேர்த்துக் கொண்டார் நாயக்கர். 

எப்படி?

கள்ளழகரை மீனாட்சியம்மனின் திருக்கல்யாணத்துடன் சம்பந்தப்படுத்தி, அவரையும் சீர்வரிசை எடுத்துவரச் செய்து மதுரை வரை வந்து வைகை ஆற்றின் வழியாகப் பல மண்டபங்களில் திருக்கண் சாற்றிச்செல்ல ஏற்பாடு செய்தார். 
மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் எப்போதும் உள்ள வழக்கப்படி, மதுரையிலேயே கோயில்கொண்டுள்ள விஷ்ணுவாகிய கூடல் அழகரே நடத்திவைப்பது மரபு. அதனை நாயக்கர் மாற்றவில்லை.  கூடல் அழகரே நடத்திவைக்குமாறு செய்தார். கள்ளழகர் பல மண்டபங்களில் திருக்கண் சாற்றி, மக்களின் மரியாதையை ஏற்றுக்கொள்ளும் மரபை நீட்டிச் செய்வித்தல்மூலம் கள்ளழகர், திருக்கல்யாணத்தின்போது மதுரையின் வெளிப்புறத்திலேயே உலா வந்து கொண்டிருப்பார். 

திருமணம் நடந்துமுடிந்தவுடன் தேரோட்டம். கள்ளழகரோ மதுரையின் எல்லையில். ஆகவே கூட்டத்துக்குக் குறைச்சலில்லை.  கள்ளழகர் சித்திரா பௌர்ணமியன்று வைகையாற்றில் இறங்கி அதன்வழியே செல்வது ஒரு பிரம்மாண்டமான விழாவாகவும் உருப்பெற்றது.  அனுபவம் போதாத பேர்வழிகளைப் பற்றி வர்ணிக்கும்போது அந்தக் காலத்தில் மதுரை வட்டகையில் சொல்வார்கள்,"நீ ஆத்தக் கண்டியா...இல்ல, அளகர சேவிச்சியா? என்னத்தக் கண்டெ நீ?"  அப்படியென்றால் "Green-horn" அந்தஸ்த்தே உள்ளவன் என்று அர்த்தம்.

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Part 4

திருமலை நாயக்கர் மதுரைக்கு வந்தபோது பல திருவிழாக்கள் இருந்தன; சிலவற்றிற்குஆள் சேர்வது கிடையாது. ஆண்டு முழுமையிலும் ஏதாவது திருவிழாக்கள் நடந்து கொண்டேயிருக்க ஏற்பாடு செய்தார். மதுரையில் நடந்த அறுபத்துநான்கு திருவிளையாடல்களில்சிலவற்றை அடிப்படையாகக் கொண்ட விழாக்களும் இஇருந்தன. அதில் அவை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அப்படியே உருவாக்கிக்காட்டப்படும்.

மற்ற திருவிழாக்களைவிட ஒரு மிகப்பெரிய திருவிழாவை மிக விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.  அதுதான் "The Festival among Festivals".
"La Grand Carnival".

அந்த விழாவுக்கு வழிவிடும்வகையிலும் வசதி செய்து கொடுக்கும் வகையிலும் மற்ற விழாக்களை இப்படி அப்படி மாற்றி அமைக்கலானார்.
 
 இனித்தொடருங்கள்.......

மதுரையிலேயே குடியிருப்பதாக முடிவுசெய்து மதுரைக்கு வந்தபின்னர், நாயக்கர் தன்னுடைய முன்னோர்கள் தங்கிய அரண்மனையிலேயே தங்கி யிருந்தார்.  ஆனால் எதையுமே பெரிதாகவும் புதிதாகவுமே செய்ய விழையும் நாயக்கர் தனக்கென்று ஒரு பெரிய அரண்மனையைக் கட்டிக் கொண்டார்.  அப்படி அவர் கட்டியதுதான் திருமலைநாயக்கர் மஹால்.  இது ஒரு தனிக்கதை. அதைப்பற்றி ஏற்கனவே தமிழ் இணையத்தில் எழுதிருக்கிறேன். அந்த மஹாலைக் கட்டுவதற்காக தரமான மண்/மணலை வண்டியூர்  என்னும் கிராமத்தின் அருகில்தோண்டி எடுத்தார்கள்.  இது மதுரைக்கு மிக அருகாமையில், வைகை ஆற்றின் கரையில் இருக்கிறது. இஇங்குள்ள மாரியம்மன் கோயில் மிகவும் சிறப்பும் புகழும் மிக்கது.  மிகப் பெரிய அரண்மனையல்லவா? இப்போது இருப்பதே பெரிதாகத்தான் இன்னும்தோன்றுகிறது. ஆனால் இது, அந்த ஆதி மஹாலில் ஐந்தில் ஒரு பகுதிதான். மீதி நான்கு பங்கு அழிக்கப் பட்டுவிட்டது.  வண்டியூரில் அதற்காக மண்தோண்டிய இஇடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுவிட்டது. நாயக்கர் அந்தப் பள்ளத்தை அப்படியே அழகிய தெப்பக்குளமாக மாற்றிக்கட்டினார். அதன் நடுவில் ஓர் அழகிய மையமண்டபமும் கட்டுவித்தார். கிட்டத்தட்ட ஆயிரம் அடிகள் நீளமும் அகலமும் உடையது இந்தத் தெப்பக்குளம்.

மீண்டும் திருவிழாவுக்கு வருவோம்.

தை மாதத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத் திருவிழா கோயிலில் நடந்து வந்துகொண்டிருந்தது. 
அந்தத் திருக் கல்யாணத்தை சித்திரைமாத வசந்தவிழாவுக்கு மாற்றிவிட்டார்.  தை மாத்திற்கு ஒன்றுமில்லாமல் போகக்கூடாதல்லவா?
ஆகவே தன்னால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழாவை விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். இஇதில் மீனாட்சி சுந்தரேசுவரரை ஓர் அலங்காரத் தெப்பத்தில் எழுந்தருளுவித்து, மையமண்டபத்தைச் சுற்றிலும் தெப்பத்தை , கரையில் இருக்கும் மக்கள் கூட்டம் இழுத்து வரும்.  இப்படி ஏற்பட்ட தெப்பத் திருவிழா தற்சமயம் இலட்சக்கணக்கில் ஆள்கூடும் திருவிழாவாகத் தனித்தன்மை பெற்றுத் திகழ்கிறது.

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Part 3

திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்னர், தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் முக்கிய திருவிழாக்கள் நடைபெற்றிருக்கின்றன. மாசியில் ஒரு தேர்திருவிழாவும் பங்குனியில் ஒரு தேரோட்டமும் நடைபெற்றன.

திருமலை நாயக்கர் தன்னுடைய திருப்பணிகளில் ஒன்றாக மிகப் பெரிய தேர்களைச் செய்துவைத்தார். தைப்பூசத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும்.

மாசி மாதத்தில் மண்டலபூசை நடைபெறும். அந்த சமயத்தில் மாசிமகத் திருவிழா நடைபெற்றது. அதன்போது, நாயக்கமன்னர் மீனாட்சியம்மனிடமிருந்து செங்கோல் வாங்கும் வைபவமும் நடந்தது. பங்குனியில் ஒரு தேரோட்டத் திருவிழா நடைபெற்றது.  பின்னர் சித்திரையில் வசந்த உற்சவம்.  வைகாசியில் வைகாசி வசந்த உற்சவம்.  அடிக்கடி திருவிழாக்கள். அடிக்கடி தேரோட்டம்.  அதுவும் நாயக்கர் செய்துவிட்ட தேரோ அளவில் மிகப் பெரியது.  அதை இழுக்க ஆட்கள் ஆயிரக்கணக்கில் வேண்டும். பழைய திருவாரூர் தேரை இஇழுக்கவே பன்னிரண்டாயிரம் பேர் தேவைப்பட்டனர். தை, மாசி மாதங்கள் அறுவடை நடந்து, முடியும் சமயம். அந்தச் சமயத்தில் தேரிழுக்க ஆள் கிடைப்பது மிகவும் சிரமம்.

தனது முதலமைச்சரும், ஆகமத்தில் விற்பன்னரும், சிறந்த ஸ்ரீவித்யா உபாசகருமான நீலகண்ட தீட்சிதர், கோயில் பட்டர்மார் ஆகியோருடன் கலந்து தீர்க்கமாக ஆலோசித்தார்.

அதன் பிறகு சில சீரமைப்புகளும் மாறுதல்களும் செய்தார்.  அந்தக் காலத்து மக்கள் இதற்கெல்லாம் எப்படிப்பட்ட உணர்வுகளைக் காட்டினர் என்பது இப்போது தெரியக்கூடுவதில்லை.

ஆனால் ஒன்று.

நாயக்கர் ஆட்சிக்கு வந்து ஆண்டபோது ஐந்து பெரும் யுத்தங்களில் மதுரை நாடு ஈடுபடவேண்டியிருந்தது. அவருடைய காலம் வரையில் அவருடைய மதுரைநாடு, விஜயநகரப் பேரரசுக்குக் கீழ் விளங்கியது. 

இது நாம்கேவாஸ்தே அல்லது de jure நிலைமைதான்.

அந்த காலகட்டத்தில் கோல்கொண்டா, பீஜாப்பூர் சுல்த்தானியரிடம் பெருமளவில் தன்னுடைய வடபாகத்தை தலைநகரங்களுடன் விஜயநகரம் இஇழந்துவிட்டு வேலூரில் மையம் கொண்டிருந்தது. அதன் கீழ் விளங்கிய மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய அரசுகள்,பேரரசைவிட வலிமை வாய்ந்தவையாக இருந்தன. நாயக்கர் விஜயநகரை அடியோடு ஒழித்துக்கட்ட நினைத்து, மேற்படி இரண்டு சுல்த்தானியரையும் மாற்றி மாற்றி பெரும் கையூட்டுக்கள் வழங்கி தூண்டிவிட்டார்.  அவர்கள் ஒருவழியாக விஜயநகரை சப்ஜாடா செய்துவிட்டார்கள். அதன் கடைசி ராயனான ஸ்ரீரங்க ராயனுக்கு முற்பட்ட ராயராகிய அவருடைய சிற்றப்பா, மைசூரில் அகதியாக வாழ்ந்து வாழ்வின் இறுதியில் மைசூர்க் காடுகளில் பைத்தியமாக அழைய நேரிட்டது. அந்த ராயருக்கு அத்தகைய கொடுமையைச் செய்த ஸ்ரீரங்க ராயன் சூழ்ச்சிகளாலும் கையாலாகாதத் தனத்தாலும் திருமலை நாயக்கர் செய்த துரோகத்தாலும் கோல்கொண்டா, பீஜாப்பூர் ஆகியவற்றிடம் நாட்டை இழந்து மைசூரில் அகதியாக பிறர் தயவில் வாழவேண்டியதாயிற்று. இவ்வாறு ஒரு பெரும் செல்வாக்கும் பலமுமிக்க ஒரு பேரரசு இருந்த இடம் தெரியாமற் போயிற்று.   தடுப்பாக விளங்கிய வேலூர் ஆட்சி அகன்றவுடன் சுல்தானியர் மதுரையின்மீது கண்ணோட்டமிட்டனர். அவர்களை நாயக்கர் ஒருவர்மீது ஒருவரை "ஜூட்" காட்டி ஏவிவிட்டு அவ்வப்போது தப்பிக்கொண்டிருந்தார்.

இதற்கெல்லாம் நிறைய செலவழிக்கவேண்டியிருந்தது. படைகளையும் அங்கும் இங்குமாக தனக்கு நேரடியாக சம்பந்தமே இஇல்லாத இடங்களுக்கெல்லாம் அனுப்பி ஊரான் போடும் சண்டையிலெல்லாம் கலந்து கொள்ளவேண்டியிருந்தது. 
போதாததற்கு தன் சொந்தப் போர்கள் வேறு.
மக்கள் மனோநிலை எப்படி இருக்கமுடியும்?
அதற்கும் உதவக்கூடியவகையில் சிலகற்களில் பல மாங்காய்களை விழச்செய்தார்.

கவனத்தை திசைதிருப்பிவிட்டால்......?

அவருக்கு போர்த்துகீசிய, ரோம், வெனிஸ் நகரத்து பரிச்சயம் நிறையவே உண்டு. அவர்களிடமிருந்து பண்டைய ரோமாபுரி வரலாற்றை அறிந்திருப்பார்போல! ஸீஸர்கள் செய்ததை நாயக்கரும் செய்தார்.

வேண்டுமென்றே செய்தாரா? 

பக்தியால்தான் செய்தார். 
சந்தேகமில்லை. 

ஆனால் அதே நேரம் அதில் சில மறைவான உள்நோக்கங்கள் இருந்தனவோ என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை.

ஸீஸர்கள் மக்களை திசைதிருப்ப விழாக்கள், கேளிக்கைகள், க்லேடியேட்டர் போட்டிகள், மிருகங்களுக்கிடையில் சண்டை, சர்க்கஸ் என்றெல்லாம் காட்டினார்கள். அந்த "சரக்கோஸ¤ பயாஸ¤க்கோப்பு" எல்லாத்தையுமே நாயக்கரும் மக்களுக்குக் காட்டியிருக்கிறார். மிருகங்களுக்கிடையில் சண்டை, பயில்வான்களின் குஸ்தி, ஆயுதப் போட்டி முதலியவற்றுக்காகவே ஒரு பெரிய மைதானத்தை நிறுவினார். அந்த அரங்கத்தின் பெயர் "தமுகமு" மைதானம்(மைதானமு?). அங்கு யானைச்சண்டைகூட நடத்தியிருக்கிறார்கள். இப்போதும் அது "தமுக்கம்" என்ற பெயரில் இருக்கிறது. அங்குதான் காந்தி நினைவு மண்டபம் கட்டியிருக்கிறார்கள். (What irony?)

ஆண்டு முழுமையிலும் ஏதாவது திருவிழாக்கள் நடந்துகொண்டேயிருக்க ஏற்பாடு செய்தார். மதுரையில் நடந்த அறுபத்துநான்கு திருவிளையாடல்களில் சிலவற்றை அடிப்படையாகக் கொண்ட விழாக்களும் இருந்தன. அதில் அவை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அப்படியே உருவாக்கிக் காட்டப்படும். மற்ற திருவிழாக்களைவிட ஒரு மிகப் பெரிய திருவிழாவை மிக விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.

அதுதான் "The Festival among Festivals".

"La Grand Carnival".

அந்த விழாவுக்கு வழிவிடும்வகையிலும் வசதி செய்து கொடுக்கும் வகையிலும் மற்ற விழாக்களை இப்படி அப்படி மாற்றி அமைக்கலானார்.

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Part 2

திருமலை நாயக்கர் ஏற்கனவே வேண்டுதல் செய்திருந்தபடி ஐந்து லட்சம் பொன்னுக்கு திருப்பணிகள், ஆபரணங்கள் முதலியன மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செய்து வைத்தார். 

கோயிலின் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் பலவற்றைச் செய்யும் போதுதான் அதிகப் பிரச்னைகள் ஏற்பட்டன. அனைத்து கோயில் ஊழியர்களும் கலகம் செய்தனர் அல்லவா? அதுமட்டுமல்லாது பட்டர்மாரிலேயே இரு பிரிவினர். குலசேகர் பாண்டிய பட்டர், விக்ரமபாண்டிய பட்டர் என்று இரண்டு மரபினர். யார்யாருக்கு என்ன உரிமைகள், முறைமைகள் என்பதில் போட்டி. 

அதை வரையறுத்துத் தந்தார். 

கோயிலில் தெய்வங்களுக்குரிய காரியங்களைச் செய்பவர்களை "தேவகன்மிகள்" என்று சொல்வார்கள். எல்லோரும் பூணூல் போட்டிருப்பதைப் பார்த்துவிட்டு, எல்லோரும் "பிரம்மணர்" என்று முடிவு கட்டிவிடுகிறோம்.

ஆனால் அவர்களில் எல்லோருமே சிவ ஆலயங்களில் தெய்வங்களுக்குரிய எல்லாக் காரியங்களையும் செய்துவிட முடியாது.

அவர்களில் உச்சகட்டத்தில் இருப்போர் "ஆதிசைவர்" எனப்படுவர். வைதிக பிராம்மணர்கள் "பிரம்மஸ்ரீ" என்று பெயருக்கு முன்னாலும் "சர்மா" என்ற பட்டத்தை பின்னாலும் போட்டுக்கொள்வார்கள். 

இவர்களோ "சிவஸ்ரீ" என்று போட்டுக்கொள்வார்கள். "பட்டர்" என்ற பட்டமுண்டு.

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Part 1

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஆட்சியை திருமலை நாயக்கர் கைப்பற்றியவுடன் அபிஷேகப் பண்டாரத்தின் கீழ் கோயில் வருமானத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கோயில் ஸ்தானிகர்கள் முதலியோர் கலகம் செய்தனர்.

அவர்களுக்கு நிரந்தர வருமான வருமாறு மான்யங்கள் விட்டுக் கொடுத்தார். அது தவிர கோயிலின் வழிபாடுகள், ஊழியர்களின் கடமைகள், திருவிழாக்கள் ஆகியவற்றை சீர்படுத்தினார். அவை எப்போதுமே நடை பெற்று வருமாறு இருபது ஊர்களையும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு பட்டயம் போட்டுக் கொடுத்தார்.

இதுதான் "திருமலைநாயக்கன் கட்டளை" எனப்படுவது. 

How did he go about it?
What did he do?
விளக்குகிறேன்.

முதலில் சிதிலமடைந்த கோயிலை செப்பனிட்டார். திருமலை நாயக்கர் செய்த பல விஷயங்கள் குறித்து நமக்கு நிறைய குறிப்புகள் கிடைத்துள்ளன. திருப்பணி மாலை, ஸ்ரீதல புஸ்தகம் என்று பல ஆவணங்கள் உள்ளன.

அவற்றில் பலவற்றை நாயக்கரே எழுதச்செய்தார். 

அவருக்கு இந்த "PR" என்று இந்தக் காலத்தில் சொல்கிறார்களே, அது மிகவும் அத்துப்படி. சிதிலமடைந்த கோயிலைச் செப்பனிட மட்டும் நிறைய செலவிட்டார். அதற்காக விஷேசமாக தயாரிக்கப் பட்ட சுண்ணாம்பில் காரை தயாரிக்கப்பட்டது.

சாதாரணமாக பூமிக்கு அடியில் படிவங்களாகவும் பாறைகளாகவும் விளங்கும் சுண்ணாம்புப்பாறைகளை உடைத்து, கற்களாக்கி, காளவாயில் இட்டு, சுட்டு, பிறகு தண்ணீர் ஊற்றி சுண்ணாம்பு தயாரிப்பார்கள்.  சுண்ணாம்புடன் மணலைச் சேர்த்துத் தண்ணீர்விட்டு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து சாந்து தயாரிப்பார்கள்.

ஆனால் மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பயன்படுத்தியது வேறு வகை.  சுண்ணாம்புப் பாறைகளுக்குப் பதில் கடல் சங்குகளைக் காளவாயில் சுட்டு, எடுக்கப்பட்டதில் வெல்லச்சாறு விட்டு அறைத்தார்கள். அதன்பின் உளுந்து, நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், முதலியவை ஊறியநீர் விட்டு, மெல்லிய சல்லடைகளால் சலித்தெடுக்கப்பட்ட பொடி மணலைச் சேர்த்து அரைத்து, சாந்து செய்து வச்சிரக்காரை தயாரித்தார்கள்.

அதுபோலவே, நயமான களிமண் கலவையில் செய்யப்பட்ட செங்கற்களை அடுக்கி, இஇந்த வச்சிரக்காரையை வைத்துப் பூசியிருக்கிறார்கள்.  பழங்கற்கள், கெட்டுப்போன உத்திரங்கள், மோசமான பகுதிகளை எடுத்து நீக்கிவிட்டு அங்கெல்லாம் புதிதாக வேலைகளைச் செய்வித்தார்.

பல புதிய பகுதிகளையும் கட்டி சேர்த்தார்.

கிழக்குக் கோபுரத்துக்கு வெளிப்புறமாக கொலுமண்டபம் அல்லது வசந்தமண்டபம் எனப்படும் "புதுமண்டப"த்தைக் கட்டுவித்தார். 

அந்தக் காலத்துக்கு அதுவே மிக அலங்காரமானதாகவும் நீராழி, அகழி சூழ்ந்து புதுமுறையில் புதிதாகக் கட்டப்பட்ட வசந்தமண்டபமாகவும் திகழ்ந்தபடியால் மதுரை மக்கள் அதனைப் "புதுமண்டபம்" என்றே அழைத்தனர்.

அதன்பின்னர் வேறுபல மண்டபங்கள் பலரால் மீனாட்சியம்மன் கோயிலிலும் மதுரையிலும் கட்டப்பட்டுவிட்டன.

ஆனாலும் புதுமண்டபத்திற்கு மட்டும் "புதுமண்டபம்" என்ற பெயர் நிலைத்துவிட்டது. ஆனால் சமீபகாலமாகத்தான் அதை வீணடித்து பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர்.  அந்த "புதுமண்டப"த்திற்கு இப்போது வயது 384 ஆண்டுகள்.

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Prologue

இப்போது Prologue......

"தமிழ்கெழுகூடல்" "மாட மதுரை மாநகர்" வந்து சேர்ந்த திருமலை நாயக்கர், தன்னுடைய முன்னோர் வசித்த அரண்மனையில் தங்கலானார்.  கோயிலின் நிலைமையை ஒரு நோட்டம் விட்டார்.  மாலிக் க·பூரின் காலத்தில் பாண்டியர்கள் கட்டிய கோயிலின் பல பகுதிகள் இஇடிக்கப்பட்டுவிட்டன. அதன்பின்னர் ஏற்பட்ட சுல்த்தானியர் ஆட்சியில் நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு அம்மன் கருவறையும் சுவாமி  கருவறையும் பூட்டியே இஇருந்தது.

குமாரகம்பண உடையார் வந்து திறந்து, பூஜைகளை மீண்டும் தொடங்கி வைத்தார். அர்ச்சகர் மரபினர் பலர் இறந்துவிட்டிருந்தனர். சிலருடைய வாரிசுகள் தொலைவில் உள்ள ஊர்களில் வசித்துக் கொண்டிருந்தனர்.  கோயிலின் கைக்கோளர் படை என்னும் செங்குன்றர் பாதுகாவற் படையினராகிய வயிராவிகளில் சிலர் மட்டும் மதுரையிலும் பக்கத்து ஊர்களிலும் இருந்தனர். 

அவர்களை வைத்து, இரண்டு தலைமுறைகளாக விடுபட்டுப் போனவைகளையும், காணாமற்போன மரபினரையும் மீட்டு, மிச்சம் சொச்சம் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆபரணங்கள் முதலியவற்றைத் தேடி எடுத்து கோயிலை நிலைநிறுவினார்.

இந்த விபரங்களும் மேலும் இஇந்தப் பகுதியில் காணப்படும்விபரங்களும் டாக்டர் ஏ.வி ஜெயச்சந்திரனுடைய Ph.D. doctoral thesis ஆன "The Madurai Temple Complex" என்னும் நூலில் உள்ளவை. அத்துடன் நான் சேகரித்த சில விபரங்களையும் கலந்துள்ளேன். 

மேற்குறித்த நூல் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.  " Turning stumbling blocks into stepping stones" என்பதற்கும், விடாமுயற்சியுடன் கூடிய கடும் உழைப்புக்கும், ஒன்றைச் செய்யும்போதே இன்னொன்றையும் சாதித்துக்கொள்ளமுடியும் என்பதற்கும் ஏ.வி.ஜே.யின் இந்த நூல் ஒன்று சான்று.  அந்த சரிதத்தை நம் இளைஞர்களுக்காக எப்போதாவது சொல்ல முயல்கிறேன்.

பின்னர் ஏற்பட்ட விஜயநகரத்தாரின் ஆட்சியில் பல அரசப் பிரதிநிதிகளும் பிரதானிகளும் செல்வந்தர்களும் சிறிது சிறிதாகக் கோயிலை எடுப்பித்து வரலாயினர்.  விசுவநாத நாயக்கரின் மரபினர் காலத்தில் இந்த திருப்பணிகள் தொடர்ந்தன. திருமலை நாயக்கர் மதுரையில் குடியேறியபோது, அபிஷேகப் பண்டாரம் என்னும் பண்டாரசன்னிதியிடம் கோயில் இஇருந்தது.  அந்த ஆசாமி கோயில் வருமானத்தையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார். கோயில் நிர்வாகமும் சீரழிந்துவிட்டிருந்தது. வழிபாடுகளும் ஒழுங்காக நடைபெறவில்லை.  ஒருநாள் இரவில், மீனாட்சியம்மன் நாயக்கரின் கனவில் தோன்றி, "திருமலையே! என்னை ஒருவரும் கவனிக்கவில்லை!" என்று சொன்னாளாம்.

நாயக்கர் ஒரு தினுசான கேரக்டர்.

அவருடைய நடவடிக்கைகளைப் பார்த்தால் இப்போதுள்ள மா·பியா டான்களின் சாயல் நிறைய அடிக்கும். பாய்ந்து பதுங்குவார்; பதுங்கிப் பாய்வார். 

கோயிலை சீர்திருத்தம் செய்யவேண்டுமானால், முதலில் தன்னுடைய கைக்கு கோயில் வந்து விடவேண்டும். அதற்கு சில வழிகளைக் கையாண்டார். அவை கட்டொழுங்குடையனவா என்பது கேள்விக்குரியதாக இருக்கலாம்.

ஆனால் நாயக்கரோ ஒரு விஷயத்தை மிக நன்கு புரிந்துவைத்துக் கொண்டு, அதனையே ஒரு பாலிஸியாகக் கடைபிடித்தவர்.

அதாவது, "The ends will always justify the means. So, make sure that the suitable ends are there; otherwise make the people accept the means - whatever the ends might turn out to be."

இஇதுதான் நாயக்கரின் வாழ்வியல் தர்மம்.

ஆகவே வைஷ்ணவ மரபைச்சேர்ந்த திருமலை நாயக்கர் சைவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த அபிஷேக பண்டாரத்தைத் தன்னுடைய குருவாக ஆக்கிக்கொண்டார். பெரும்பணம் கொடுத்தார். நிலங்களை உரிமையாக்கினார். அபிஷேகபண்டாரத்தின் பெயரும் மீனாட்சியம்மன் கோயிலின் திருப்பணியில் முக்கிய இடம் பெறவேண்டும் என்பதற்காக சுவாமி சன்னிதியின் இரண்டாம் பிரகாரத்தைக் கட்டத்தூண்டினார்.  பண்டாரத்தின் சிலையையும் கோயிலின் ஒரு தூணில் வைத்துவிட்டார்.  கோயிலின் ஆட்சியை திருமலை நாயக்கர் அபிஷேகப் பண்டாரத்திடமிருந்து பெற்றுக்கொண்டார்.

அந்தக் காலத்தில் "Forceful persuasion and willing compliance" என்பது ஒரு கலையாக விளங்கியது.  அபிஷேகப்பண்டாரம் was only too willing to comply.

திருமலை நாயக்கருக்குத் திருப்பணிகள் திருவிழாக்கள் செய்வதும் பிடிக்கும்; ஆட்களை மாறுகால் மாறுகை வாங்குவதும் பிடிக்கும்.

இந்த விருப்புகளெல்லாம் அபிஷேகப் பண்டாரத்துக்கும் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா?  After all, he was a learned man who understood the ways of  the world.